ஜெ.தீபா வீட்டில் போலி வருமான வரித்துறை அதிகாரியாக நடித்த பிரபாகரனுக்கு 3 நாள் போலீஸ் காவல்
ஜெ.தீபா வீட்டில் போலி வருமான வரித் துறை அதிகாரியாக நடித்த பிரபாகரனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
Recommended Video
சென்னை: ஜெ.தீபாவின் தி.நகர் வீட்டில் போலி வருமான வரித் துறை அதிகாரியாக நடித்த பிரபாகரனை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை தி.நகர் சிவஞானம் சாலையில் உள்ள ஜெ.தீபாவின் வீட்டுக்கு வருமான வரித் துறை அதிகாரி என்று கூறி கொண்டு ஒருவர் வந்திருந்தார். அவர் பெயர் மித்தேஷ் குமார் என்றும் தெரிவித்தார்.
காலை 6 மணிக்கெல்லாம் வந்த அவர், 10 மணிக்கு மேலும் 10 அதிகாரிகள் வந்த பிறகு விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து அவரது நடவடிககையில் சந்தேகம் ஏற்பட்டதால் தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அந்த நபர் தப்பி ஓட்டம் பிடித்தார். பின்னர் கடந்த திங்கள்கிழமை அன்று அவராகவே மாம்பலம் போலீஸாரிடம் சரணடைந்தார். அவரிடம் நடந்த விசாரணையில் , சினிமா வாய்ப்பு தருவதாக மாதவன் தன்னிடம் தெரிவித்ததாகவும் ஒரு ஒத்திகை போல் தனது வீட்டுக்கு வருமான வரித் துறை அதிகாரி வேடத்தில் வருமாறு அவர் கூறியதாக அந்த நபர் தெரிவித்தார்.
அவரது பெயர் பிரபாகரன். புதுச்சேரியில் ஹோட்டல் வைத்துள்ளார். இதனிடையே மாதவன் தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் தான் கொடுத்த வாக்குமூலத்தில் உண்மையில்லை என்றும் மாதவனுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் மீண்டும் ஒரு வாக்குமூலத்தை அவர் கொடுத்தார்.
இந்நிலையில் பிரபாகரனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து அவரிடம் இருந்து ஏராளமான தகவல்கள் விசாரணையில் கிடைக்க பெறும் என்றும் தெரிவித்தார்.