ஜெ. மர்ம மரண வழக்கை போலீஸ் விசாரிக்குமா? விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு!
ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.
சென்னை: ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அதனை விசாரிக்க வேண்டும் எனவும் கடந்த மே 22 ஆம் தேதி செல்வ விநாயகம் என்ற வழக்கறிஞர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் முறையிட்டார். அதில், அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 186 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தப் புகாரை காவல் துறையினர் ஏற்காததை அடுத்து அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்தார். அவர் தனது மனுவில், ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்திற்கு விடைகாணும் வகையில் விரிவான விசாரணை நடத்தக்கோரி, தான் காவல்துறையில் புகார் அளித்ததாகவும் ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
எனவே ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 186 பேரிடம் விசாரிக்க வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.