இங்கிட்ட்டு கொடுக்கிற மாதிரி கொடுத்து அங்கிட்டு கல்லா கட்டி எடுப்போம்!
அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்த கையோடு செலவை சமாளிக்க மதுபான விலையையும் உயர்த்தியுள்ளது தமிழக அரசு.
சென்னை: அரசு ஊழியர்களுக்கான் ஊதியத்தை உயர்த்தியிருக்கும் அதேநேரத்தில் செலவை சமாளிக்க மதுபான விலையையும் உயர்த்திவிட்டது தமிழக அரசு.
அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ 7-வது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் குதித்தது. இதையடுத்து நீதிமன்றம் தலையிட்டு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
தற்போது அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்துவிட்டது தமிழக அரசு. ஏற்கனவே ரூ2 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது தமிழக அரசு.
தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி
அத்துடன் தமிழக அரசின் வருவாய் ஆதாரமாக இருந்த மதுபான கடைகளை உச்சநீதிமன்றம் மூடவும் உத்தரவிட்டிருந்தது. இதனால் நிதிநெருக்கடியில் சிக்கி தவித்தது தமிழக அரசு.
அரசு ஊழியர்கள் ஊதியம் உயர்வு
அண்மையில்தான் கணிசமான மதுபான கடைகளை மீண்டும் திறந்தது தமிழக அரசு. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மதுகடைகளில் கூடுதல் விலை
இந்த ஊதிய உயர்வை சரி கட்டும் வகையில் மதுபானங்கள் விலையையும் கணிசமாக உயர்த்திவிட்டது தமிழக அரசு. பொதுவாக மதுபான கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாகவே ஏற்கனவே விற்பனை செய்கின்றனர்.
மதுபான விலை கிடுகிடு அதிகரிப்பு
தற்போது ரூ10 முதல் ரூ12 வரை விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் அரசுக்கு மட்டுமல்ல.. டாஸ்மாக் சார் அத்தனை பேர் காட்டிலும் மழைதான். அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதைப் போல அறிவித்துவிட்டு மதுபான விலையை உயர்த்தி ‘குடிமகன்'களை வைத்து கல்லா கட்டுகிறது தமிழக அரசு.