விருதுநகர்: 100 நாள் வேலை திட்டத்தில் கூலி குறைப்பு... சாலை மறியலில்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் அரசு நிர்ணயித்த கூலியை வழங்க கோரி பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது என்.சுப்பையாபுரம். அங்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த திட்டத்தில் பணி புரியும் பெண்களுக்கு தினக்கூலியாக ரூ.175 தர வேண்டும். ஆனால் ரூ.100 மட்டுமே கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் சாத்தூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பிடிஓ கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். ரூ.140 கூலி தருவதாக பிடிஓ கூறியதாக தெரிகிறது. ஆனால் அரசு நிர்ணயித்த தொகை வழங்க வேண்டும் என பெண்கள் ஆவேசத்துடன் கூறினர்.
இதில் உடன்பாடு ஏற்படாததால் பெண்கள் அனைவரும் சாத்தூர் சிவகாசி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை கைவிடாததால் 88 பெண்கள், 5 ஆண்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.