சம்பளம் கேட்டு செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதையில் தொழிலாளர்கள் போராட்டம்
தென்காசி: செங்கோட்டை-புனலூர் அகல ரயில்பாதையில் 6வது குகை அமைக்கும் தொழிலாளர்கள் சம்பம் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செங்கோட்டை - புனலுார் இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பாதையில் ஆரியங்காவு- தென்மலை இடையே மூன்றாவது குகையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் மலையைக் குடைந்து 200 மீட்டர் துாரத்திற்கு புதிய குகை அமைக்கும் பணி 70 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டது.
இந்த பணியை ஒப்பந்தம் எடுத்த டெல்லியை சேர்ந்த கான்டிராக்டர் கொல்லத்தை சேர்ந்த ஒருவருக்கு சப் கான்டிராக்ட் கொடுத்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து பணம் கொடுத்து வந்த டெல்லி கான்டிராக்டர் அந்த சப் கான்டிராக்டருக்கு 40 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளார்.
இதன் காரணமாக சப் கான்டிராக்டர் வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமலும், வாகனங்களுக்கு டீசல் போட முடியாமலும் கடனில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கழுதுருட்டி-தென்மலை இடையே அமைக்கப்படும் 6வது குகையின் பணியினை கடந்த 9 நாட்களாக நிறுத்தியுள்ளார்.
இங்கு பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் சம்பளமில்லாமல் தினமும் சாப்பாட்டுக்கு அல்லல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் இன்று புதிய குகை முன்பு நின்று சுமார் 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.