ஜெ.வின் ஆர்.கே.நகர் தொகுதியில் "கஞ்சா சாக்லேட்" விபரீதம்... கோமாவில் 9ம் வகுப்பு மாணவன்!
சென்னை: சென்னையில் கஞ்சா சாக்லேட் விற்பனை பெருமளவில் அதிகரித்து வருகிறது என்ற புகார் நீண்ட காலமாகவே உள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் 10 கிலோ கஞ்சா சாக்லேட்டை ஒரு பெட்டிக் கடையிலிருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து இந்த கஞ்சா சாக்லேட்டை சமூக விரோத கும்பல்களைச் சேர்ந்தவர்கள் விற்று கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர். இது மாணவர்களை சிறு வயதிலேயே விபரீதச் செயல்களில் ஈடுபட தூண்டுவதோடு, அவர்களது உயிருக்கும் கூட ஆபத்தாக மாறி வருகிறது.
சென்னையில் மிகப் பெரிய அளவில் இது பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதைத் தடுக்க பெரிய அளவில் போலீஸாரும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் முதல்வரின் தொகுதியில் ஒரு விபரீதம் கஞ்சா சாக்லேட்டால் நிகழ்ந்துள்ளது. இதையடுத்தே தற்போது அதிகாரிகள் விழித்தெழுந்து வந்து அங்கு ரெய்டுகளில் ஈடுபட்டுள்ளனர்.
தண்டையார்ப்பேட்டை
ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை படேல் நகரில் மாநகராட்சிப் பள்ளி உள்ளது. அந்தப் பள்ளிக்கு எதிராக உள்ள பெட்டிக் கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை அப் பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தொடர்ந்து வாங்கிச் சாப்பிட்டு வந்துள்ளனர். இப்படி சாக்லேட் சாப்பிட்ட 9ம் வகுப்பு மாணவர்கள் 4 பேருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதில் பரத் என்ற மாணவன் சுய நினைவை இழந்தான்.
முதல்வர் தொகுதி
முதல்வர் தொகுதி என்பதால் இந்த விஷயம் வெளியே வராமல் தடுக்கவே அதிகாரிகள் மும்முரம் காட்டினர். ஆனால் விஷயம் வெளியில் வந்து விட்டது. சம்பந்தப்பட்ட கடையில் சோதனையிட்ட அதிகாரிகள் அந்த பெட்டிக்கடைக்காரரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் வைத்தியநாதன் பாலம் அருகே உள்ள மோதிலால் என்பவர் நடத்தி வரும் பெட்டிக் கடையிலிருந்தும் 10 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட மாநில கஞ்சா
இந்த கஞ்சா சாக்லேட் இங்கு தயாரிக்கப்படுவதல்ல. வட மாநிலங்களிலிருந்துதான் இது வருகிறது. பள்ளி மாணவர்களை அடிமையாக்கி அவர்கள் மூலமாக வசூல் வேட்டை நடத்த போதை வஸ்துக்களை விற்போர் கண்டுபிடித்த வழி இது.
அடிமையாகி விடுகிறார்கள்
இந்த சாக்லேட்டுக்கு பழக்கமானவர்கள் நாளைடைவில் கஞ்சாவுக்கு அடிமையாகும் நிலை ஏற்படும். இதனால் அவர்கள் நேரடியாக கஞ்சாவை வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதுதான் கஞ்சா வியாபாரிகளுக்கும் சாதகமாகி விடுகிறது. வட சென்னையில் பல பகுதிகளில் குறிப்பாக தண்டையார்ப்பேட்டை பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை பல இடங்களில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
விஷ விதை
முதல்வர் தொகுதியிலேயே இப்படிப்பட்ட விபரீத விஷ விதை பரவலாக தூவப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளதால் போலீஸாரும், உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு சென்னை மட்டுமல்லாமல், தமிழகத்தில் எந்த இடத்திலும் இந்த கஞ்சா சாக்லேட் விற்பனை நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.