"சூப்பர்" சாலையாகப் போகுதாம் 8 வழிச் சாலை.. உதயக்குமார் சொல்லும் காரணத்தைப் பாருங்க!
நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு அளித்துள்ளதால் 8 வழி சாலை இனி சூப்பர் சாலையாக அமையும் என அமைச்சர் ஆர் பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு அளித்துள்ளதால் 8 வழி சாலை இனி சூப்பர் சாலையாக அமையும் என அமைச்சர் ஆர் பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை-சேலம் இடையே ரூ.10,000 கோடி செலவில் 8 வழி பசுமைச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இதற்காக நிலத்தை கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த், சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.
8 வழிச்சாலைக்கு ஆதரவு
அப்போது சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்தார். இதுபோன்ற பெரிய பெரிய திட்டங்கள் தமிழகத்திற்கு வர வேண்டும், அப்போதுதான் நாடு முன்னேறும் என்றார்.
விவசாய நிலங்களை பாதிக்காமல்
மேலும் இதுபோன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும் போது இழப்புகள் வரும், இழப்பு ஏற்பட்டவர்கள் திருப்திபடும் வகையில் பணம் வழங்கவேண்டும் என கூறினார். முடிந்தவரை விவசாய நிலங்களை பாதிக்காத வகையில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
சூப்பர் சாலையாக அமையும்
இந்நிலையில் ரஜினியின் இந்த பேச்சுக்கு அமைச்சர் ஆர்பி உதயக்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்ததால், இனி இது சூப்பர் வழிச்சாலையாக அமையும் என்றார்.
கவிழ்ந்து கிடக்கிறார்கள்
மேலும் அதிமுக ஆட்சி கவிழும் எனக்கூறியவர்கள் தற்போது கவிழ்ந்து கிடக்கிறார்கள். தொண்டர்களை உற்சாகப்படுத்தவே தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளதாக அமித்ஷா பேசியுள்ளார்.
அமித்ஷா எப்படி பேசுவார்?
பாஜக பொதுக்கூட்டத்தில் அதிமுக அரசின் சாதனையை பற்றி அமித்ஷா எப்படி பேசுவார்? என்றும் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கேள்வி எழுப்பினார்.