செல்போன் பறிமுதல் எதிரொலி: சேலம் மத்திய சிறையில் 4 கைதிகள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்
சேலம் சிறையில் 4 கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம்: தங்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்ததால் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் குண்டர் தடுப்பு கைதிகளாவர். இந்த கைதிகளிடையே சமீப காலமாக செல்போன் மற்றும் கஞ்சா புழக்கம் அதிகரித்து இருப்பதாக அடிக்கடி புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.
இந்த புகார்களின் அடிப்படையில் சிறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி, செல்போன் மற்றும் கைதிகள் பயன்படுத்தும் கஞ்சாவினை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதன்படி, கடந்த 10-ந் தேதி சிறை வளாகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன் ஒன்றினை பறிமுதல் செய்தனர். இதனால் கைதிகள் மற்றும் சிறை ஊழியர்களிடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் செல்போனை பறிமுதல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறையில் 4 கைதிகள் இன்று காலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கபோவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளது சிறைத்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் சிறைத்துறை அதிகாரிகள் போராட்ட கைதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அவர்கள் சமாதானமடையாமல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிறைகாவலர்களை எதிர்த்து கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.