தாம்பரத்தில் ரயில் பெட்டி உடைக்கப்படவில்லை.. சிசிடிவியில் பதிவு.. கொள்ளை நடந்தது சென்னையிலா?
சென்னை : ரயில் பெட்டியில் ரூ.5.75 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எந்த துப்பும் கிடைக்காமல் தவித்து வந்த நிலையில், சென்னையில் பணம் கொள்ளை நடந்ததற்கான சிசிடிவி வீடியோ ஆதாரம் தற்போது போலீசில் சிக்கியுள்ளது. பணிமனை அல்லது சரக்கு இறக்கும் பகுதியில் ஊழியர்கள் உதவியுடன் கொள்ளை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு ரயிலில் ரிசர்வ் வங்கிக்கு கொண்டு வரப்பட்ட பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகள் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. சேலத்தில் இருந்து விருத்தாசலம் வரை டீசல் இன்ஜின் மூலமாகவும், பின்னர் அங்கிருந்து சென்னைக்கு மின்சார என்ஜின் மூலமாகவும் ரயில் இயக்கப்பட்டது.
சேலத்தில் இருந்து விருத்தாச்சலம் வரை ரயிலில் என்ஜினுக்கு அடுத்த பெட்டியாக பணம் கொண்டு வந்த பெட்டி இணைக்கப்பட்டிருந்தது. விருத்தாசலத்தில் என்ஜின் மாற்றும்போது, கடைசி பெட்டியாக பணம் இருந்த பெட்டி இணைக்கப்பட்டது.
கொள்ளை நடந்தது எப்படி?
சேலத்தில் இருந்து விருத்தாசலம் வருவதற்கான இடைவெளியில் உள்ள நேரமான 2.30 மணி நேரத்திற்குள் கொள்ளை சம்பவத்தை கொள்ளையர்கள் அரங்கேற்றியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்தனர். ஏனெனில் இந்த தடத்தில்தான் டீசல் இன்ஜின் மூலம் ரயில் இயக்கப்படுகிறது.
போலீஸ் விசாரணை
ரயில் பெட்டியில் பணம் ஏற்றும்போது முதல் இறக்கும்வரை டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார்தான் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்தக் கொள்ளை குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தினர். பின் இந்த வழக்கு மாநில போலீசான ரயில்வே போலீசுக்கு மாற்றப்பட்டது.
விசாரணை அதிகாரி
தனிப்படை போலீசார் கொள்ளை நடந்த ரயில் பெட்டியை செவ்வாய்கிழமை இரவே ஆய்வு செய்தனர். இந்தக் கொள்ளையை கண்டுபிடிக்க டிஎஸ்பி சிவணுபாண்டியன் தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் ரயிலில் விசாரணை நடத்தினர்.
ரயில்வே ஊழியர்கள்
அப்போது ரயில்வே ஊழியர்கள் சிலரும் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடந்தது. ரயிலில் பக்கவாட்டில் உள்ள இரும்புதான் அதிகமான எடை கொண்டது. அதை வெட்டி எடுப்பதுதான் கடினம். ஆனால் மேற் கூரை 1.6 மி.மீட்டர் இரும்பு தகடால் செய்யப்பட்டது. அதை கடப்பாரையால் ஓங்கி குத்தினால், ஒரே குத்தில் ஓட்டை விழுந்து விடும் அளவிற்கு மெலிதானது.
ரயில் மேற்கூரை
மேல் கூரை மழையில் இருந்து மக்களை காப்பாற்றவே செய்யப்பட்டுள்ளது. பக்கவாட்டில் உள்ள இரும்புதான் விபத்தில் இருந்து காப்பதற்காக தடிமனான இரும்பால் செய்யப்பட்டது. ஆனால் மேற் கூரையை எளிதாக உளியால் உடைக்க முடியும். மேற் கூரை சாதாரண இரும்பால் பொருத்தப்பட்டது என்பது சாதாரண கொள்ளையனுக்கு தெரிய வாய்ப்புகள் இல்லை.
ரயில்வே ஊழியர்கள்
ரயிலைப் பற்றி நன்றாக தெரிந்தவர்கள் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும். அல்லது அவர்கள் கொடுத்த தகவலின்படி கொள்ளையர்கள் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும். மேலும் வெட்டி எடுக்கப்பட்ட பகுதி ரயிலுக்குள்தான் இருந்தது. அதையும் போலீசார் கைப்பற்றினர்.
சிசிடிவி காட்சிகள்
எழும்பூர் மற்றும் தாம்பரத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ரயில்வே போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, தாம்பரத்தில் உள்ள கேமராவைப் பார்த்தபோது பணம் கொண்டு வந்த ரயில் பெட்டி உடைக்கப்படாமல் இருந்தது. இதனால் தாம்பரம் வரை கொள்ளையடிக்கப்படவில்லை என்று உறுதியானது.
ரயில்வே பணிமனை
எழும்பூர் ரயில்நிலையத்துக்கு அதிகாலை 4.40 மணிக்கு ரயில் வந்துள்ளது. பின்னர் 4.55 மணிக்கு ரயில்வே பணிமனைக்கு பணம் இருந்த பெட்டி எடுத்துச் செல்லப்பட்டது. காலை 8 மணிக்கு பணிமனையில் இருந்து எழும்பூர் ரயில்நிலையத்தில் உள்ள 2வது நடைமேடைக்கு அந்த பெட்டி இழுத்து வரப்பட்டது. அதன்பின் சரியாக 10 மணிக்கு சரக்குகள் இறக்கும் பகுதிக்கு அந்த பெட்டி கொண்டு செல்லப்பட்டது.
பாதுகாப்பு போலீஸ
11.30 மணிக்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் வந்து ரயில் பெட்டியின் சீலை உடைத்தபோதுதான் கொள்ளை நடந்தது தெரியவந்தது. இதனால் எழும்பூர் யார்டில் இருந்த நேரத்தில் கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த நேரத்தில் பாதுகாப்புக்கு இருந்த போலீசார் குளிக்கச் சென்றதாவும், சிலர் சாப்பிடச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
மற்றொரு கோணம்
சேலத்தில் இருந்து புறப்படும்போதே ரயிலின் மேற் கூரையை லேசாக உடைத்து வைத்திருக்கலாம். எழும்பூர் பணிமனையில் ரயில் பெட்டி வந்ததும் பெட்டி மீது ஏறி, அதை உடைத்து கொள்ளையடித்து விட்டு தப்பியிருக்கலாம் என்றும் மற்றொரு கோணத்தில் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர் ஆனால் கொள்ளை சம்பவம் சென்னையில்தான் நடந்திருக்கும் என்றும் போலீசார் உறுதியாக நம்புகின்றனர்.
சேலம் சென்ற குழு
ரயில்வே ஊழியர்கள் துணையுடன் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில் சிபிசிஐடியின் ஒரு குழுவினர் சேலத்துக்கு சென்று விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.