வர வர நம்ம கலெக்டர்கள் செய்யும் காரியங்களைப் பார்த்தால்..!
சென்னை: வர வர நம்ம ஊர் கலெக்டர்கள் மக்களை கதிகலங்க வைக்கும் வகையிரல் செயல்பட ஆரம்பித்துள்ளனர். சேலம் பக்கம் போனால் ரோகினி கலக்குகிறார்.
நெல்லைப் பக்கம் போனால் ஷில்பா பிரபாகர் மிரட்டுகிறார். சரி நீலகிரி கூலாக இருக்கும் என்று அங்கு போனால், இன்னொசன்ட் திவ்யா பிரமாதப்படுத்துகிறார்.
சரி எல்லோரும் நல்லதுதானே செய்கிறார்கள். பிறகு ஏனய்யா உமக்கு இந்த புலம்பல்.. இந்த கேள்வி உங்களது வாய் வரை வந்ததை நாம் அறிவோம்.. தொடர்ந்து படிங்க மக்கா!
ஷில்பா பிரபாகர்
நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ள கூனியூர் கிராமம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கூனியூர் மெயின் சாலையில் அமைந்துள்ள 40 அடி உயரமுள்ள 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறி, பொதுமக்களுக்குச் சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.
40 அடி உயர தொட்டி
பின்னர், அங்குள்ள மகளிர் சுகாதார வளாகம் சுத்தமான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்பதையும் கழிவுநீர் ஓடைகள் முறையாகப் பராமரிப்பு செய்யப்படுகிறதா என்பதையும் பார்வையிட்டார். தெரு விளக்குகளை ஆய்வு செய்த அவர், எரியாத விளக்குகளை எல்.இ.டி பல்புகளாக மாற்றுமாறு உத்தரவிட்டார்.
105 அடி உயரம்
அதன் பிறகு நடந்ததுதான் யாரும் எதிர்பாராதது... சேரன்மகாதேவி நீதிமன்றம் எதிரே அமைந்துள்ள 105 அடி உயரமுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது விடுவிடுவென அவர் ஏற ஆரம்பித்தார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அவருடன் வந்திருந்த அதிகாரிகளில் சிலர் மேலே ஏறுவதற்கு அச்சப்பட்டார்கள்.
சுத்தம் செய்யாதது அம்பலம்
ஆனால், எதையும் கண்டுகொள்ளாத ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தொட்டியின் மீது ஏறி விட்டார். அங்கு ஆய்வு செய்தபோது அந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படவில்லை என்பதைக் கண்டறிந்தார். அதனால் அந்தத் தொட்டியை உடனடியாக சுத்தம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதேபோல ஆய்வு தொடரும்
பின்னர் கீழே இறங்கி வந்த அவர், வழக்கமான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளேன். இதேபோல மாவட்டம் முழுவதும் சென்று ஆய்வு மேற்கொள்வேன். அதனால் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அதிகாரிகள் தங்களுடைய பகுதிகளைச் சிறப்பாக பராமரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலிருந்து கீழே பார்த்தால் தலை சுற்றிப் போகும் உயரத்தில் உள்ள குடிநீர் தொட்டி மீது கடகடவென ஏறி இறங்கிய ஷில்பாவைப் பார்த்து அங்கிருந்து ஆச்சரியப்பட்டுப் போயினர்.
ராவும் இப்படித்தான்
கடந்த சில தினங்களுக்கு முன் மதுரை ஆட்சியராக இருந்த வீரராகவராவ் நுாறடி உயர தொட்டியில் ஏறி ஆய்வு நடத்தினார். தற்போது நெல்லை ஆட்சியரும் ஆய்வு நடத்தியுள்ளார். இதேபோல சேலம் கலெக்டர் ரோகினியும் அவ்வப்போது இது போல ஏதாவது செய்கிறார். சிமெண்ட்டை எடுத்து பூசுகிறார். தெருவைக் கூட்டுகிறார். பாடம் நடத்துகிறார். பல அவதாரம் செய்து கமலுக்கு கடும் போட்டியாக திகழ்கிறார்.
உயிர் முக்கியம் இல்லையா
இது நல்ல விஷயம் தான் என்றாலும் ஒரு மாவட்டத்தை கவனிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் ஆபத்தான இந்த செயலை செய்வது தேவையற்றது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை வைத்தே இதை செய்யலாம். அதிகாரிகளின் வற்புறுத்தலால் தான் இது போன்ற நடக்கிறதா என கேள்வியும் எழுகிறது.