நீ என்னை நினைச்சு எவ்ளோ அழுதாலும் நான் வர மாட்டேன்டா... காதலுக்குப் "பலியான" பெண்ணின் கதறல்!
சேலம்: காதல் என்றாலே போராட்டம்தான்.. எதிர்த்து சமாளித்து கரை சேருவோர் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம், போராட முடியாமல் பொசுங்கிப் போகும் உயிர்களும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வரிசையில் சேர்ந்துள்ளார் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி (23) என்ற கல்லூரி மாணவி.
ஓடும் பஸ்சிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் இந்த பிரியதர்ஷினி. சேலம் மாடவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி. எம்ஏ 2ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் இவருக்கு காதல் மலர்ந்துள்ளது. எம்.சி.ஏ படித்து வரும் அரவிந்த் (22) என்பவரைக் காதலித்துள்ளார்.
இருவரும் நெருங்கியும் பழகியுள்ளனர். இந்த நிலையில் பிரியதர்ஷினியின் வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். இதனால் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அரவிந்த்த்தை நெருக்கியுள்ளார் பிரியதர்ஷினி. ஆனால் அவர் ஏற்கவில்லை போலும். இந்த நிலையில்தான் தற்கொலை முடிவை எடுத்து விட்டார் பிரியதர்ஷினி.
சாகும் முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதம் தற்போது போலீஸில் சிக்கியுள்ளது. அதில் பிரியதர்ஷினி உருக்கமாக கூறியுள்ளதாவது:
டியர் அரவிந்த், என்னை எந்த வார்த்தையெல்லாம் பேசக் கூடாதோ அந்த வார்த்தையெல்லாம் நீ பேசிட்ட. இருந்தாலும் எனக்கு உன்மேல இருந்த லவ் குறையல. நீ எந்த அளவுக்கு உன் குடும்பத்து மேல பாசம் வச்சிருக்கியோ அதே அளவு நான் உன் மேல வைச்ச லவ் உண்மை. அதை என்னால் மறக்க முடியல.
என் லவ்வ கடைசி வரைக்கும் நீ புரிஞ்சிக்கல. ஆனா இப்போ என்னோட உயிர கொடுத்து என் லவ்வ நிரூபிக்க போகிறேன். இவ்வளவு நாள் சேர்ந்து சுத்தினோம். ஜாலியா என்ஜாய் பண்ணினோம். அது மட்டும் லவ் இல்ல. எந்த பிரச்சினை வந்தாலும் எதிர்கொள்ள வேண்டும் அந்த தைரியம் உன்கிட்ட இல்லப்பா, இருந்தாலும் உன் கூட நான் வாழ்ந்த நாட்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாது.
நான் செத்துட்டா என் கல்லறையில் கூட நம்ம ஞாபகம் அழியாதுடா, அந்த அளவுக்கு நான் உன் மேல வச்சப் பாசம், என் லவ்வை நீ புரிஞ்சிக்கும்போது அத நான் பார்த்து சந்தோஷப்பட முடியாது. ஏனா நீ இதை படிக்கும்போது நான் உயிரோடு இருக்க மாட்டேன்.
உன் கூட உன் பொண்டாட்டியா ஒரு நாள் வாழ்ந்துட்டேன். அது போதும். இந்த ஜென்மத்துல அந்த சந்தோஷத்தோடு நான் போறேன்டா. எப்போது நான் இருந்த இடத்தில் இன்னொருத்திய உன்னால் நினைக்க முடியுமுன்னு நீ நினைச்சியோ அப்போதே செத்துட்டேன். இது வெறும் பொணம்.
இப்ப சாகுறது நீ கவலைப்படத்தான். நீ ஆசைப்பட்ட மாதிரி நல்ல பொண்ணு உன் வாழ்க்கையில் கிடைக்கும். நீ என்னை நினைச்சு எவ்ளோ அழுதாலும் நான் வரமாட்டேன்டா என்று கூறியுள்ளார் பிரியதர்ஷினி.
தற்போது அரவிந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.