தனியார் பள்ளியில் கத்தி, அரண்மனை படம் ஒளிபரப்பு: சேலம் முதன்மை கல்வி அதிகாரியிடம் புகார்
சேலம்: சேலத்தில் இயங்கி வரும் தனியார் பெண்கள் பள்ளி ஒன்றில் மாணவிகளுக்கு கத்தி, அரண்மனை உள்ளிட்ட படங்கள் திருட்டு விசிடி மூலம் காட்டப் பட்டதாக, அம்மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் புகார் அளித்துள்ளது.
சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் இயங்கி வரும் தனியார் பெண்கள் பள்ளியில் கடந்த 31ந்தேதி அரண்மனை படமும், இம்மாதம் 7ம் தேதி கத்தி படமும் மாணவிகளுக்குக் காட்டப் பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சிறப்புக் காட்சிக்கென மாணவிகளிடம் பள்ளி நிர்வாகம் கட்டணம் வசூலித்ததாகவும் தெரிகிறது.
இது தொடர்பாக கேள்விப் பட்ட தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கத் தலைவர் பூமொழி, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமாரிடம் புகார் செய்துள்ளார்.
இப்புகாரின் பேரில் செல்வக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
இது தொடர்பாக பூமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பள்ளியில் மாணவிகளிடம் பணம் வசூலித்து கத்தி உள்பட புதிய படங்களை காட்டி உள்ளனர். இது திருட்டு சி.டி. சட்டப்படி குற்றமாகும். இதற்கு ஏற்பாடு செய்த அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் புகார் செய்துள்ளோம்.
அவரும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறி உள்ளார். இந்த சம்பவம் குறித்து அரசுக்கும், கல்வி துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் மனு தர உள்ளோம்' எனத் தெரிவித்துள்ளார்.