காமராஜர் சிலைக்கு மாலை காவிக் கொடி... பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் மோதல்
சேலத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கும்போது காங்கிரஸ் – பாஜகவினரிடையே மோதல் ஏற்பட்டது.
சேலம்: சேலத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியின்போது பாஜகவினருக்கும் காங்கிரஸ்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு சேலம் கமலா மருத்துவமனை அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்காக சேலம் பாஜகவினர் காமராஜர் சிலையில் பாஜகவின் கொடிகளையும் தோரணங்களையும் கட்டிவைத்திருந்தனர். சேலம் மாநகர காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர்.
சிலையில் காவிக் கொடி
அப்போது, காமராஜர் போன்ற தலைவர்கள் எல்லோருக்கும் உரியவர்கள் அவருடைய சிலை அருகே இப்படி பாஜக கட்சி கொடிகளைக் கட்டக்கூடாது என்று கூறினர். மேலும், காங்கிரஸ் தலைவரான காமராஜர் பிறந்தநாளில் அவரது சிலையில் பாஜக கொடி கட்டக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தினர்.
அகற்றம்
சிலையில் கட்டியிருந்த பாஜக கொடியை காங்கிரஸ்காரர்கள் அகற்றக் கூறியதால், அங்கே திரண்டிருந்த பாஜவினருக்கும் காங்கிரஸ்காரர்களுக்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டது. பின்னர், இது வாக்குவாதமாக மாறியது. திடீரென பாஜகவினர் இருந்த பக்கம் இருந்து காங்கிரஸ்காரர்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இதைத் தொடர்ந்து, இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
புறப்பாடு
இந்த கைகலப்பில் காயமடைந்த காங்கிரஸைச் சேர்ந்த பச்சைப்பட்டி பழனி, பூபதி காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாஜக தரப்பில் காயமடைந்த ரமேஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த மத்திய அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
விசாரணை
இந்த கைகலப்பு சம்பவம் குறித்து, காங்கிரஸ் கட்சியின் சேலம் மாநகர மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ் நம்மிடம் கூறியதாவது, சிலை இருக்கின்ற பகுதியில் கொடி கட்டியிருந்தால் பிரச்சனையில்லை. காமராஜர் சிலையிலேயே பாஜக கொடி கட்டியிருந்தார்கள். அதனை அகற்றவேண்டும் என்று நாங்கள் கூறினோம். ஆனால், அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தார்கள். காங்கிரஸ்காரர்கள் மீது பாஜகவினர் கல் வீசியதால் காமராஜர் சிலையும் சேதம் அடைந்துள்ளது என்று கூறினார். இந்த மோதல் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.