பா.ம.க கோட்டைக்குள் புகுந்த தினகரன்! 200 கார்களோடு நடக்கும் அணிவகுப்பு மேளா
Recommended Video
சென்னை: சேலம் மாவட்டத்தில் உள்ள பா.ம.கவின் முக்கிய பிரமுகர்கள் கூண்டோடு விலகி, தினகரன் அணியில் நாளை இணைய உள்ளனர்.
' கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இல்லை என்ற பிரசாரத்தை முறியடிக்கும் வகையில் களமிறங்கியிருக்கிறார் தினகரன். நாளை ஆயிரம் பா.ம.க தொண்டர்கள் இணைய உள்ளனர்' என்கின்றனர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள்.
பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளரும் சேலம் மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் தலைவருமான சண்முகத்திடம், தினகரன் அணியின் முக்கிய நிர்வாகி ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
முக்கியத்துவம்
' கட்சியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்களுக்கு எந்த முக்கியத்துவத்தையும் தலைமை தருவதில்லை. குடும்ப ஆதிக்கம் அதிகரித்துவிட்டது' என சேலம் மாவட்ட பா.ம.க நிர்வாகிகள், அந்த நிர்வாகியிடம் புலம்பிவந்தனர்.
நாளை இணைப்பு
இதனையடுத்து, சண்முகம் தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ராஜா, ஜெயவேல், மலை பெருமாள், வன்னியர் சங்கத்தின் முன்னாள் மாநில துணைத் தலைவர் கணேசன், கெங்கவல்லி சட்டமன்ற வேட்பாளராகப் போட்டியிட்ட சண்முகவேல் மூர்த்தி, முன்னாள் மாவட்ட அமைப்பாளர் லோகநாதன், பா.ம.கவின் வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவையின் முன்னாள் துணைத் தலைவர் வக்கீல் சிவக்குமார், வக்கீல் வெங்கடேசன், மாவட்ட வன்னியர் சங்க முன்னாள் செயலாளர் பழனிசாமி, உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைத் திரண்டுவிட்டனர். இவர்கள் அனைவரும் நாளை ஓமலூரில் டி.டி.வி.தினகரன் முன்னிலையில் இணைய உள்ளனர்.
மாற்று கட்சிகள்
சேலம் மாவட்ட தினகரன் அணியின் நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். " பா.ம.கவின் முக்கிய நிர்வாகிகளை எங்கள் அணிக்குக் கொண்டு வர வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. ' மாற்றுக் கட்சிகளில் இருப்பவர்கள், தினகரன் தலைமையை ஏற்றுக் கொண்டால், அவர்களை வரவேற்கலாம்' என்பதுதான் எங்கள் எண்ணம்.
டெல்டா மட்டுமில்லை
அந்த அடிப்படையில் விரக்தியில் இருந்த சில நிர்வாகிகள், எங்களைச் சந்தித்துப் பேசினர். பொதுவாக, டெல்டா உள்பட தென்மாவட்டங்களின் சில பகுதிகளில்தான் தினகரனுக்குத்தான் செல்வாக்கு என ஆளும்கட்சியினர் தகவல் பரப்புகின்றனர். முதல்வரின் சொந்த மாவட்டத்தில் இருந்தே, எங்கள் அணியில் இணைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
முதல்வர் மண்டலம்
நாளை ஓமலூரில் நடக்கும் விழாவில் தினகரன் முன்னிலையில் பா.ம.கவினர் இணைய உள்ளனர். இதற்காக, சுமார் 200 கார்களில் அணிவகுத்துச் செல்ல உள்ளனர். கொங்கு மண்டலத்தின் மற்ற பகுதிகளிலும் எங்கள் செல்வாக்கை நிலைநாட்ட உள்ளோம்" என்றார்.