சேலம் நாகலிங்க மரத்தில் எல்லைப் பிடாரி அம்மனின் கண்!
சேலம்: சேலத்தில் உள்ள எல்லைப்பிடாரி அம்மன் கோவில் நாகலிங்க மரம் கண் திறந்து பார்த்தாக எழுந்த செய்தியால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேலத்தில் அமைந்துள்ள அரசு கலைக்கல்லூரி முன்பாக எல்லைப்பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூன்றுகால பூஜைகளும் முறைப்படி நடந்து வருகின்றன.மேலும், இங்கு குவியும் பக்தர்களும் அதிகம். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இக்கோவிலில் கூட்டம் அலை மோதும்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு இக்கோவிலுக்கு வந்த ஒரு சிறுமி, அங்கு அமைந்துள்ள நாகலிங்க மரத்தின் அடியில் அம்மனின் கண்கள் தெரிந்ததாகவும், அதனை தான் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அச்சிறுமியின் பெற்றோர் அம்மரத்தினை கற்பூரம் ஏற்றி வணங்கினர். இச்செய்தியால் பக்தர்கள் கூட்டம் அங்கு திரண்டது. பக்தர்களில் சிலருக்கு அருள் வந்து எல்லைப்பிடாரியான நான் இந்த மரத்தில் இறங்கியுள்ளேன். என்னை வணங்கினால் குழந்தைவரம் கிடைக்கும் என்று தெரிவித்தனர்.
இந்த சம்பவம் சேலம் பகுதிகளில் காட்டுத்தீப்போல் பரவியது. இதையடுத்து திரளான பெண்கள் அம்மன் கண் திறந்ததாக கூறப்பட்ட நாகலிங்க மரத்திற்கு வந்து மரத்தை வணங்கி சென்றனர். இதையடுத்து மரத்திற்கு மஞ்சள் பூசி அதற்கு குங்குமம் வைத்து தற்போது சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நாகலிங்க மரத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு வேறு என்னென்ன வசதிகள் செய்து தர வேண்டும் என்று ஆய்வு செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.