பசுமை வழிச் சாலையை கைவிடாவிட்டால்.. முதல்வர் வீடு முன்பு தற்கொலை.. கிராம மக்கள் அதிரடி!
பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு சேலம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்,.
சேலம்: விவசாய நிலங்களை அழிக்கும் திட்டமான பசுமை வழிச்சாலை திட்டத்தினை கைவிடாவிட்டால் தமிழக முதல்வர் வீடு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்வோம் என பூலாவரி கிராம மக்கள் பகீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது. மாவட்டத்தின் 'கனிம வளங்களை கொள்ளையடிக்கவே, பசுமை சாலை திட்டத்தை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதை செயல்படுத்தினால், அடுத்த தலைமுறையினர், விவசாயம் செய்ய வழியின்றி பாதிக்கப்படுவர் என்றும் மாவட்டத்தின் பல கிராம மக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும் இந்த திட்டத்தினால் நீராதாரமும் பாதிக்கப்படும் என்பதால் இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பலமுறை பலவடிவங்களில் தங்களுடைய போராட்டங்களை அவர்கள் தொடர்ந்து நடத்தி கொண்டு வருகின்றனர். ஆனாலும் தமிழக அரசு பசுமை வழிச்சாலை திட்டத்தினை அமைப்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தங்களின் பலகட்ட போராட்டங்களுக்கு தமிழக அரசு செவிசாய்க்கவில்லை என்று குற்றஞ்சாட்டி வரும் நிலையில், சேலம் பூலாவரி கிராம மக்கள் அடுத்த கட்ட போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கும்போது, பச்சைபசேல் என்ற மரங்களும், சோலைகளும் நிறைந்துள்ள பகுதிகளை அழித்துவிட்டு இந்த பசுமைவழிச்சாலையை கொண்டுவர அரசு ஏன் துடிக்கிறது என தெரியவில்லை என கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த திட்டத்தினால் விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் எந்த பயனும் கிடையாது என்றும் காலம் காலமாக இருக்கும் தங்களுடைய நிலத்தை, சொற்ப விலைக்கு அரசுக்கு என்றுமே தரமாட்டோம் என்றும் பூலாவரி கிராம மக்கள் உறுதிபட தெரிவிக்கின்றனர். ஆனால் அதையும் மீறி தங்களது நிலம் கைப்பற்றப்படுமானால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டின் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்வதை தவிர எங்களுக்கு வேறு வழியே இல்லை என்றும் அவர்கள் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.