8 வழி சாலை திட்டத்திற்கே தடை விதிக்கவேண்டி வரும்.. தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் எச்சரிக்கை
சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்காக மோசமான நடவடிக்கையில் ஈடுப்பட்டால், அந்த சாலை திட்டத்திற்கே மொத்தமாக தடை விதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை எச்சரித்துள்ளது.
சென்னை: சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவது, மரங்களை வெட்டுவது என்ற மோசமான நடவடிக்கையில் ஈடுப்பட்டால், அந்த சாலை திட்டத்திற்கே மொத்தமாக தடை விதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை எச்சரித்துள்ளது.
பசுமை வழி சாலை என்ற பெயரில் சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்தி வந்தது. இதில் விவசாய நிலங்கள், பாரம்பரியமாக கட்டப்பட்ட வீடுகள் என கையகப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வழங்கியுள்ளது. இதற்காக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் கோபமாக சில கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஏன் உண்மையை கூறவில்லை
அதில், தடையை மீறி 8 வழிச் சாலை திட்டத்துக்காக மரங்களை வெட்டுவதா? சாலைக்காக மரம் வெட்டினால் முறையான காரணம் சொல்ல வேண்டும். திட்டத்தின் அறிக்கையில் எங்கும் மரம் வெட்டுவதாக ஏன் கூறவில்லை. திட்டத்தில் அப்படி இருக்கும் பகுதிகளை சமர்ப்பிக்க வேண்டும்.
மரம் வெட்டுவது
எந்த சூழ்நிலையில் மரம் வெட்டப்படுகிறது என்று கூற வேண்டும். தேவையில்லாமல் மரங்களை வெட்ட கூடாது. சேலம் சாலைக்காக மரங்களை வெட்டியது ஏன். மரங்களை வெட்டமாட்டோம் என்று கூறிவிட்டு வெட்டியது ஏன். தமிழக அரசின் நடவடிக்கை முறையற்றது.
ஏன் பொய் சொன்னீர்கள்
நிலம் அளவிடுவதாக கூறிவிட்டு ஏன் கையகப்படுத்தினீர்கள். உங்கள் நிலத்தை கையகப்படுத்தினால் பொறுத்துக் கொள்வீர்களா. மக்கள் எல்லாம் சேர்ந்து அரசு அதிகாரிகளின் நிலங்களை கையகப்படுத்த வேண்டும் என்று அரசு வக்கீலிடம் நீதிபதிகள் அதிரடி கேள்வி எழுப்பினர்.
நிரந்தர தடை
தமிழக அரசு இப்படியே செயல்பட்டால் திட்டத்திற்கே தடை விதிக்க வேண்டி வரும். தமிழக அரசு சேலம் சாலையால் ஏற்படும் சமூக பாதிப்பு குறித்து ஆய்வு அறிக்கை செய்ததா? அப்படியென்றால் அந்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். தமிழக அரசு இதில் உடனடியாக பதிலளிக்க வேண்டும், இல்லையென்றால் இந்த சாலை திட்டத்திற்கு நிரந்தரமாக தடை விதிக்க நேரிடும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.