சேலத்தில் பொய்வழக்குப்போட்ட ஆய்வாளரைக் கண்டித்து பொதுமக்கள் முற்றுகைக் போராட்டம்
பொய்வழக்குப் போட்ட காவல்நிலைய ஆய்வாளரைக் கண்டித்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
சேலம் : சேலம் மாவட்டம் காரிப்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கூட்டத்துப்பட்டி கிராம மக்கள் மீது பொய்வழக்குப் போட்ட ஆய்வாளர் கமலேஷைக் கண்டித்து பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கூட்டத்துப்பட்டியில் சுமார் 500 க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இப்பகுதி பொதுமக்கள் மீது காரிப்பட்டி காவல்நிலையம் ஆய்வாளர் கமலேஷ் தொடர்ந்து பொய்வழக்குகள் போட்டு மிரட்டுவதாக அப்பகுதி பொதுமக்கள் ஏற்கனவே குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
இந்நிலையில் சம்மந்தப்பட்ட காவல் அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கூட்டத்துப்பட்டி பகுதி பொதுமக்கள் திரளானோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
போராட்டத்தின் போது திடீரென ஆதார் கார்டு மற்றும் குடும்ப அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை சாலையில் எறிந்து மாவட்ட நிர்வாகத்திற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதனால் சுமார் இரண்டு மணி நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடும் பரபரப்பு நிலவியது. பின்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.