இரிடியம் இருப்பதாக ஏமாற்றிய பெண் அடித்துக் கொலை – 4 பேர் கைது
சேலம்: சேலத்தில் இரிடியம் இருப்பதாக ஏமாற்றிய பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பச்சனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனியம்மாள். இவர் விலை மதிப்புமிக்க இரிடியம் தன்னிடம் இருப்பதாகவும், அதன் மூலம் புதையல் கிடைக்கும் எனக் கூறியதன் பேரில், பலர் லட்சக்கணக்கான ரூபாயை பழனியம்மாளிடம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.
பணத்தை வாங்கியவர்களிடம் திருப்பித் தராத காரணத்தால் ஏற்பட்ட பகையின் காரணமாக பலர் பழனியம்மாள் மீது கடுமையான கோபத்தில் இருந்தனர். இந்தநிலையில், பழனியம்மாள் கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி அவரது வீட்டுக்குப் பகத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் பி.கே.சின்னையன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஓமலூர் ஒன்றியச் செயலர் கோவேந்தன் ஆகியோரை ஏற்கனவே ஓமலூர் போலீஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில், பழனியம்மாளின் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக சின்னையனின் மனைவியும், முன்னாள் கவுன்சிலருமான பாப்பா, மேச்சேரி அருகேயுள்ள சிந்தாமணியூர் பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரசாத் ஆகிய இருவரையும் ஓமலூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.