நடிகர் மன்சூர் அலிகானின் ஜாமீன் மனு தள்ளுபடி.. பியூஷ் மானூஷுக்கு ஜாமீன்! ஓமலூர் நீதிமன்றம் அதிரடி
மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை சேலம் ஓமலூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சேலம்: மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை ஓமலூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதே நேரத்தில் பியூஷ் மானூஷுக்கு ஓமலூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சென்னையை வந்தடையும் இந்த பசுமை வழி சாலையானது 8 வழி விரைவு சாலையாக அமைக்கப்பட உள்ளது. இதற்காக 8,000 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில் சேலத்தில் உள்ள நீர்நிலைகளை பார்வையிடுவதற்காக நடிகர் மன்சூர்அலிகான் நேற்று கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரிக்கு சென்றார். அங்குள்ள பரிசலில் சென்று ஏரியை சுற்றிப்பார்த்தார்.
சேலத்தில் மன்சூர் அலிகான்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சேலத்தில் விமான நிலையம், எட்டு வழிச்சாலை அமைந்தால் சேலத்தில் மக்கள் வாழ முடியாது. எட்டு வழிச்சாலை அமைத்தால் ஏராளமான மரங்கள், மலைகள் அழியும். அதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.
8பேரை வெட்டுவேன்
மத்திய, மாநில அரசுகள் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்தக்கூடாது. எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன் என நடிகர் மன்சூர் அலிகான் பேசினார்.
மன்சூர்அலிகான் கைது
இந்நிலையில், சேலம் - எட்டுவழிச்சாலை திட்டம் குறித்து வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகானை சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
ஜாமீன் மனு தள்ளுபடி
இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் ஓமலூர் நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. அதே நேரத்தில் சமூக ஆர்வலர் பியூஷ் மானூஷுக்கு ஓமலூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.