மொத்தம் 4 மனைவிகள்.. 3 பேர் "ஓட்டம்".. 4வது மனைவி தற்கொலை.. இது மாரியப்பனின் கதை!
சேலம்: சேலம் மாவட்டம் காவேரிபாளையம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் கதை மிகப் பெரிய சோகமாக உள்ளது. இவருக்கு மொத்தம் 4 மனைவிமார்கள். இதில் 4வது மனைவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக மாரியப்பனைப் பிடித்துப் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
காவேரிபாளையம் காலனியை சேர்ந்த கூலித் தொழிலாளிதான் மாரியப்பன். வயது 35 ஆகிறது. ஆனால் நான்கு கல்யாணம் செய்து விட்டார்.
இவர் திருமணம் செய்த முதல் மூன்று மனைவிகளும் வாழ வந்த சில மாதங்களிலேயே அவரை விட்டு ஓடி விட்டனர். என்ன காரணம் என்று தெரியவில்லை. இந்த நிலையில் அருக்காணி என்பவரின் மகளான டயானா என்கிற புஷ்பாவை திருமணம் செய்தார் மாரியப்பன்.
3 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. முதல் மூன்று திருமணம் போல இது தோல்வியில் முடியாமல் நன்றாகவே போனது. அழகான இரு பெண் குழந்தைகளும் பிறந்தன. இந்த நிலையில் யார் கண் பட்டதோ தெரியவில்லை, கணவன் மனைவி இடையே பிரச்சினை வெடித்தது.
2 நாட்களுக்கு முன்பு டயானா தனது வீட்டில் வைத்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து ஓடி வந்த அவரது தாயார்,தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி கொளத்தூர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மாரியப்பனை அழைத்து விசாரித்து வருகின்றனர்.
அவரது முதல் 3 கல்யாணம் குறித்தும், அது தோல்வியில் முடிந்தது தொடர்பாகவும் மாரியப்பனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனராம்.