சர்ச்சைக்குரிய சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் மீது போலீஸ் வழக்கு
சேலம்: சர்ச்சைக்குரிய சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் மீது சேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பியூஷ் மனுஷ் கடந்த மாதம் 8-ந் தேதி மேம்பாலம் கட்டும் பணிகளை தடுக்க முயன்றதால் காவல்துறையினர் அவரை கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். சிறையில் காவலர்கள் தாக்கியதாக பியூஷ் மானுஷ் புகார் தெரிவித்திருந்தார்.
ஆனால் சிறையில் பியூஷ் மனுஷ் தாக்கப்படவே இல்லை; அவர் நாடகமாடுகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அப்படி போலீசாரின் தாக்குதலுக்குள்ளாகி இருந்தால் அவர் ஏன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவில்லை எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.
இதேபோல் பியூஷ் மனுஷ் மீது ஏகப்பட்ட புகார்கள் கிளம்பின. இந்த நிலையில் சேலம் நிலவாரபட்டி அதிமுக பிரமுகர் மணிகண்டனின் உதவியாளர், பியூஷ் மனுஷ் தம்மை தாக்கியதாக மல்லூர் காவல்நிலயத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் அதிமுக பிரமுகர் அரசு புறம்போக்கு நிலத்தில் முறைகேடாக பாறைகள் வெட்டி எடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கோட்டாட்சியரிடம் அளித்த புகாருக்கு பழிவாங்கவே இந்தப் பொய்ப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார் பியூஷ்.