சேலத்தில் கமிஷன் பெற்று கொண்டு 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்தவர் கைது
சேலத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுக்க 20 சதவீதம் கமிஷன் பெற்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம்: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால், தங்களிடம் உள்ள அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நேற்று வங்கிகள் விடுமுறை விடப்பட்டதால் இதனை பயன்படுத்தி கமிஷன் அடிப்படையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றித் தரும் திடீர் வியாபாரம் துவங்கியது.
சேலத்தில் பொதுத்துறை வங்கியின் அருகிலேயே 500 ரூபாய்க்கு 100 ரூபாய், 1000 ரூபாய்க்கு 200 ரூபாய் என்ற கமிஷன் அடிப்படையில் நோட்டுகளை மாற்றிக் கொடுத்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரது கூட்டாளிகள் இருவரை தேடி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் கமிஷன் பெற்றுக் கொண்டு 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் செயல்கள் அரங்கேறி வருகின்றன. சில இடங்களில் 1000 ரூபாய்க்கு 400 ரூபாய் கமிஷனாக எடுத்துக் கொண்டனர். இன்று வங்கிகளில் கூட்டம் அலைமோதுவதால் இன்றும் பலரும் கமிஷன் முறையில் பணத்தை மாற்றி கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி உள்ளிட்ட இடங்களில் 100 ரூபாய் நோட்டுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை பயன்படுத்தி, 500 ரூபாய் நோட்டுடன் வரும் மக்களிடம் அத்தியாவசிய பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. இதனால் 250 ரூபாய் மதிப்புள்ள காய்கறிகளை 500 ரூபாய் நோட்டு கொடுத்து வாங்கியதாக பெண்கள் தெரிவித்தனர்.
சென்னையில் ஒரு நபர் 500 ரூபாயை ஒருவரின் கையில் கொடுத்து அவரிடம் இருந்த 180 ரூபாயை மட்டுமே பெற்றுச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பணப்புழக்கம் இல்லாத காரணத்தால் இன்றும் பெரும்பாலான ஹோட்டல்கள்,கடைகள் பொதுமக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.