சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும்... வேல்முருகன்
சென்னை: சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் தனித்துவ அடையாளங்களில் ஒன்றாக திகழும் சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் முயற்சியை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.
சேலத்தில் 1970-ம் ஆண்டு திட்டம் உருவாக்கப்பட்டு 1981-ம் ஆண்டு குளிர் உருட்டாலை தொடங்கப்பட்டது. இரும்பு சுருள்களை வெளியில் இருந்து வாங்கி வந்து உற்பத்தி நடத்தி வந்தது சேலம் இரும்பாலை.
1995ம் ஆண்டு இரும்பு சுருள்களை உற்பத்தி செய்யும் வெப்ப உருட்டாலையும் சேலத்திலேயே தொடங்கப்பட்டது. இதற்கான மூலதன பொருளான ஸ்லாப்புகளை இங்கேயே தயாரிக்க 2010ம் ஆண்டு ரூ.2 ஆயிரம் கோடி செலவில் எஃகு உற்பத்தி கூடம் தொடங்கப்பட்டது.
தற்போது சேலம் உருக்காலையில் ஆண்டுக்கு 70 ஆயிரம் டன் பொருட்கள் குளிர் உருட்டாலையிலும், 3.95 லட்சம் டன் பொருட்கள், வெப்ப உருட்டாலையிலும், 1.80 லட்சம் டன் பொருட்கள் எஃகு உற்பத்தி கூடத்திலும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே துருப்பிடிக்காத எஃகு மூலம் பொருட்கள் உற்பத்தி செய்யும் கூடம் சேலம் உருக்காலையில் தான் முதன் முதலில் தொடங்கப்பட்டது.
இந்த உருக்காலையில் 300 அதிகாரிகள், 1,000 நிரந்தர பணியாளர்கள், கூட்டுறவு சங்கம் மூலம் பணியாற்றுபவர்கள் 350 பேர், 500 ஒப்பந்த பணியாளர் என 2,500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். அத்துடன் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உருக்காலை மூலம் மறைமுக வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
இப்படி தமிழர்களின் நிலத்தில் தமிழர்களின் உழைப்பில் உருவான இந்த இரும்பாலையை கடந்த பல ஆண்டுகளாகவே தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. சேலம் இரும்பாலையை திட்டமிட்டு நட்டத்தில் இயங்கி வைக்கிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள்.
ஆண்டுக்கு ரூ.100 கோடி வரை லாபத்தில் இயங்கி வந்த உருக்காலை தற்போது ரூ.450 கோடி வரை நட்டத்தில் இயங்கி வருகிறது. சேலம் உருக்காலையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த, மத்திய விற்பனை மையம் கொல்கத்தாவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனால் உருக்காலையின் வாடிக்கையாளராக இருந்த 70 நிறுவனங்கள் படிப்படியாக குறைந்து, தற்போது 9 நிறுவனங்கள் மட்டுமே ஒப்பந்தம் செய்துள்ளன. இப்படியான செயற்கையான நட்டத்தை காரணம்காட்டி ஒட்டுமொத்தமாக சேலம் இரும்பாலையை அப்படியே தனியாருக்கு தாரைவார்க்க மத்திய அரசு முயற்சித்து வருவது கடும் கண்டனத்துக்குரியது.
ஒரு பொதுத்துறை நிறுவனம் நடத்தில் இயங்குகிறது என கருதினால் உரிய அதிகாரிகளை நியமித்து அதை லாபத்தில் இயங்க வைப்பதற்கு பதிலாக அப்படியே தனியாருக்கு தாரைவார்த்தால் அந்த இரும்பாலையை இத்தனை ஆண்டு காலம் நம்பி வாழ்க்கையை நடத்தி வரும் தொழிலாளர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்து கிஞ்சித்தும் சிந்திக்காமல் மத்திய அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது. ஆகையால் சேலம் இரும்பாலையை தனியாருக்குத் தாரைவார்க்கும் முயற்சியை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
தமிழக அரசும் உடனே தலையிட்டு சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரைவார்ப்பதை தடுத்து நிறுத்த போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகளை தொடக்கத்திலேயே மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
- இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.