' போலீஸ் எஸ்.ஐக்கு பேட்டா ரூ.500' - சேலம் திருவிழா கமிட்டியின் 'பகீர்' கணக்கு
சென்னை: சேலம் மாநகரத்தில் உள்ள பிரபலமான கோவிலில் நடந்த திருவிழாவில், போலீஸ்காரர்களுக்கு வழங்கப்பட்ட பேட்டாவை வரவு செலவு கணக்கோடு குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ' காவலுக்காக வரும் போலீஸாருக்கு எவ்வளவு தொகை கொடுத்தோம் என்பதை இந்தளவுக்கு யாராலும் எழுதி வைக்க முடியாது' என்கின்றனர் ஊர்ப் பொதுமக்கள்.
சேலத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று, அருள்மிகு குஞ்சு மாரியம்மன் தர்மராஜா திரௌபதி அம்மன் திருக்கோவில். சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வருவது வழக்கம்.
பொதுவாக, ஏப்ரல், மே மாதங்களில் கோவில் திருவிழாக்கள் களைகட்டுவது வழக்கம். அப்படித்தான் அண்மையில் 23-ஆம் ஆண்டு திருவிழாவை நடத்தி முடித்துள்ளனர் திரௌபதி அம்மன் திருக்கோவில் விழா கமிட்டியினர்.
விழா முடிந்த பிறகு எவ்வளவு செலவானது என்பதைப் பற்றி வரவு செலவுக் கணக்குப் பட்டியலையும் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளனர். அதில், கோவில் திருவிழாவின் காவல் பணிக்காக அழைக்கப்பட்டிருந்த எஸ்.ஐ, போலீஸ் கான்ஸ்டபிள் ஆகியோருக்கு 250 ரூபாயில் இருந்து 1,000 ரூபாய் வரையில் அன்பளிப்பு வழங்கியிருந்தையும் குறிப்பிட்டுள்ளனர்.
மொத்தம் வசூலான தொகையான 1,62,012 ரூபாய், போலீஸுக்கு வழங்கிய படியையும் சேர்த்தே கழித்துள்ளனர். காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக பணம் கொடுத்ததை, திருவிழா கமிட்டியினரே ஒத்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.