இன்னொரு பெண்ணின் கணவரை அபகரித்த நில அபகரிப்புப் பிரிவு பெண் சப் இன்ஸ்பெக்டர்!
சேலம்: சேலம் அருகே இன்னொரு பெண்ணின் கணவருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அவரை மனைவியுடன் சேர விடாமல் தடுத்து முழுமையாக குடும்பம் நடத்தி வந்த நில அபகரிப்புப் பிரிவு பெண் சப் இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட எஸ்.பி பரிந்துரைத்துள்ளார்.
சேலம் பாலப்பட்டியைச் சேர்ந்தவர் சிவபாக்கியம். 29 வயதான இவர் மாவட்ட எஸ். பி அலுவலகத்திர்கு வந்தார். அங்கு மாவட்ட எஸ்.பி சக்திவேலிடம் ஒரு புகாரைக் கொடுத்தார்.
அதில், எனது கணவருக்கும், சேலம் மாவட்ட நில அபகரிப்பு மீட்டு பிரிவில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் கெஜலட்சுமி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இதனால் தனது கணவர் வீட்டை கவனிக்கவில்லை என்றும், குழந்தைகள் படிப்பு செலவுகூட செய்யவில்லை.
கெஜலட்சுமி எனது கணவரை முழுமையாக அபகரித்துக் கொண்டுள்ளார். எனது கணவரை அவரிடமிருந்து மீட்டுத் தர வேண்டும் என்று கோரியிருந்தார். இதையடுத்து விசாரணைக்கு எஸ்.பி. உத்தரவிட்டார்.
விசாரணைக்குப் பின்னர் தற்போது கெஜலட்சுமி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் சேலம் சரக டிஐஜி அமல்ராஜுக்கு எஸ்.பி. சக்திவேல் பரிந்துரைத்துள்ளார்.