கள்ளக்காதலுக்கு 'சீனப் பெருஞ்சுவராக' இருந்த கணவன்... கூலிப்படையை வைத்து காலி செய்ய முயன்ற மனைவி!
சேலம்: சேலத்தில் கணவனை கொலை செய்ய முயற்சி செய்த மனைவி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள தும்பிபாடி பகுதியைச் சேர்ந்த விவசாயி அர்ச்சுனன். இவரை சனிக்கிழமை இரவு மர்ம நபர்கள் கத்தியால் குத்தி விட்டுச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த அர்ச்சுனன் சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து அவரது மனைவி லட்சுமியிடம் விசாரணை நடத்தினர். நள்ளிரவில் முகத்தை மூடியிருந்த மர்ம நபர்கள் தனது கணவரைக் கத்தியால் குத்திவிட்டு, தான் அணிந்திருந்த 5 பவுன் நகையைப் பறித்துச் சென்றுவிட்டதாக லட்சுமி கூறினார்.
மேலும், லட்சுமி முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். சம்பவ இடத்தில் விசாரித்தபோது, லட்சுமிக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் கட்டட மேஸ்திரி பழனிசாமி என்பவருக்கு தகாத தொடர்பு இருந்ததை போலீஸார் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து, லட்சுமி, பழனிசாமியை பிடித்து போலீஸார் சோதனை நடத்தினர். அதே நேரத்தில், மர்ம நபர்கள் பறித்துவிட்டுச் சென்றதாகக் கூறிய 5 பவுன் தங்கச் சங்கிலியை லட்சுமி சேலையில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் பின்னரின் போலீஸாரின் கவனிப்பில் உண்மையைக் கக்கி விட்டார் லட்சுமி.
தகாத தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் லட்சுமியும், பழனிசாமியும் சேர்ந்த கூலிப்படையை அமர்த்தி அர்ச்சுனனை கொல்ல முயன்றது தெரியவந்தது.
இதனையடுத்து இருவரையும் தீவட்டிப்பட்டி போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில், கூலிப்படையாக செயல்பட்ட மேலும் இரு நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.