தூத்துக்குடியில் அழிந்து வரும் உப்பள தொழில்.. தொழிலாளர்கள் கவலை
தூத்துக்குடியில் உப்பு தொழில் நசிந்து வருவதால் தொழிலாளர்கள் கவலையில் உள்ளனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உப்பு தொழில் நசிந்து வருவதால் தொழிலாளர்கள் கவலையில் உள்ளனர். சமீப காலங்களில் போதுமான அளவு உப்பு உற்பத்தி செய்யப்படுவதில்லை.
இந்தியாவில் உப்பு உற்பத்தியில் தூத்துக்குடி இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை தூத்துக்குடியில்தான் உப்பு உற்பத்தி அதிகமாக நடக்கிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்புகள் தோல் தொழிற்சாலைகள், மீன்கள் பதப்படுத்தும் தொழிற்சாலை மற்றும் கெமிக்கல் தொழிற்சாலைகளுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. மற்ற இடங்களில் விளையும் உப்பை விட தூத்துக்குடியில் உள்ள உப்பு சுவை மிகுந்ததாக இருப்பதால் இதற்கு எப்போதும் அதிக கிராக்கி உண்டு.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், குளைச்சல், தருவைகுளம், முத்தையாபுரம், முள்ளங்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. இதில் உப்பு உற்பத்திக்கு தேவையான தண்ணீர் கடலில் இருந்து நேரடியாக கொண்டு வரப்பட்டது.
ஆனால் தற்போது கடற்கரை ஓரம் தொழிற்சாலைகள் பெருகி வருவதால் அதில் இருந்து வெளியேறும் கழிவுகள், புகைகள் பட்டு உப்புகள் சேதம் அடைவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் உப்பின் தரமும் குறைவாக புகார் எழுந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால் உப்பு உற்பத்திக்கு தேவையான நீர் கிடைக்காமல் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த பிரச்சனையால் உப்பு தொழிலை நம்பி இருந்த ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.