உப்பு தட்டுப்பாடு வதந்தி.. அதிக விலைக்கு உப்பு விற்பனை.. சேலத்தில் 3 கிடங்குகளுக்கு சீல்
உப்பு தட்டுப்பாடு வதந்தியால் அதிக விலைக்கு உப்பு விற்பனை செய்ததால் சேலத்தில் 3 கிடங்குகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை: சேலம் மாவட்டத்தில் உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியதால் உப்பை அதிக அளவில் வாங்க மக்கள் குவிந்தனர். இதனால் கடைக்காரர்கள் அதிக விலைக்கு உப்பை விற்றனர். அப்படி அதிக விலைக்கு உப்பு விற்ற 3 கிடங்குகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் உப்புக்கு தட்டுப்பாடு இருப்பதாக வதந்தி பரவியதால் மக்கள் நீண்ட வரிசையில் இரவு பகல் பாராமல் உப்பை வாங்கிச் சென்றனர். இதனால் உப்பின் விலை 200 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரை விற்கப்பட்டது. மேலும், கூட்ட நெரிசலில் மூதாட்டி ஒருவரும் பலியானார்.
உப்பு போதிய அளவிற்கு கையிருப்பு இருப்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு, மற்றும் அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இருந்தாலும் வதந்தியை யார் கட்டுப்படுத்துவது. வதந்தி அப்படியே தமிழகத்திற்கு பரவி வருகிறது. இரண்டு நாட்கள் முன்னர் திருத்தணியில் உப்புத்தட்டு வதந்தி பரவியதைத் தொடர்ந்து நேற்று சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உப்புத்தட்டு வதந்தி பரவி உப்பின் விலை உயர்ந்து வருகிறது.
சேலம் மாவட்டம் மேட்டூரில் தட்டுப்பாடு காரணமாக உப்பு கிலோ ஒன்றுக்கு 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வதந்தி பரவியது. இதையடுத்து பொதுமக்கள் அவசரமாக கடைகளுக்கு சென்று உப்பு வாங்கியதையடுத்து, ஒரு கிலோ உப்பு விலை 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதுதொடர்பாக தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அங்குள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதனைத் அடுத்து, நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் போதுமான அளவிற்கு உப்பு இருப்பதாகவும், உப்பு விலை குறித்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று வருவாய்த்துறையினர் அறிவித்தனர்.
இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் சம்பத் அஸ்தம்பட்டியில் உள்ள உப்பு கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், சேலம் மாவட்டத்தில் 1541 ரேஷன் கடைகளில் 60 டன் உப்பு கையிருப்பு உள்ளது. பொதுமக்கள் அதிக விலை கொடுத்து உப்பு வாங்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், உணவு வழங்கல்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது, செவ்வாய்பேட்டையில் அதிக விலைக்கு உப்பு விற்ற 3 கிடங்குகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.