உப்பு தட்டுப்பாடு வதந்தி... சேலத்தில் ஒரு கிலோ உப்பு ரூ 400-க்கு விற்பனை?
மேட்டூரில் தட்டுப்பாடு காரணமாக ஒரு கிலோ உப்பு 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வதந்தி பரவியது.
சேலம்: உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கிளம்பிய வதந்தியால் மேட்டூரில் ஒரு கிலோ உப்பு 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூரில் தட்டுப்பாடு காரணமாக உப்பு கிலோ ஒன்றுக்கு 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வதந்தி பரவியது. இதையடுத்து பொதுமக்கள் அவசரமாக கடைகளுக்கு சென்று உப்பு வாங்கத்தொடங்கினர். இதனால், ஒரு கிலோ உப்பு விலை 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என புகார் கூறப்பட்டது. தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அங்குள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
பின்னர், இது வதந்திதான் என்றும், பொதுமக்கள் இதை நம்பத்தேவையில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் போதுமான அளவிற்கு உப்பு இருப்பு உள்ளது. ஆகையால் உப்பு விலை குறித்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். வதந்தி பரப்பியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய்த்துறையினர் எச்சரித்தனர்.
முன்னதாக டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் உப்பு தட்டுபாடு ஏற்பட்டதாக வதந்தி பரவியது. இதையடுத்து அந்த மாநிலங்களின் சில பகுதிகளில் ஒரு கிலோ உப்பு ரூ.400-க்கு விற்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. பின்னர் உத்தரப்பிரதேசத்தின் எந்த பகுதியிலும் உப்பு தட்டுப்பாடு ஏற்படவில்லை என்று முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் விளக்கமளித்தார். மேலும் மாநிலத்தில் தேவையான அளவு உப்பு இருப்பு உள்ளது. தேவையற்ற வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.