தமிழகத்தையும் எட்டிப் பார்த்தது வடமாநில 'உப்பு' வதந்தி- எகிறியது விலை!
கடந்த இரண்டு நாட்களாக வட மாநிலங்களை சுற்றி வந்து மக்களை வதை செய்து வந்த உப்பு தட்டுப்பாடு வதந்தி மெல்ல திருவள்ளூர் மாவட்டத்தை அடைந்துள்ளது.
திருத்தணி: உப்பு தட்டுப்பாடு உள்ளது என்ற வதந்தியால் வடமாநிலங்களில் அடிதடி, போராட்டம், உயிர் பலி என்று கடந்த இரண்டு நாட்களாக களேபரமாக உள்ளது. இதனைத் தொடர்ந்து உப்புத் தட்டுப்பாடு புரளி தமிழகத்தை தொட்டிருக்கிறது. இதனால் ஒரு மூட்டை கல் உப்பு மூட்டையின் விலை 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் 9ம் தேதியில் மக்கள் ஒரு நெருக்கடி நிலைக்கு ஆளானது போல் பணத்திற்காக வங்கிகள், அஞ்சலகங்கள், திறக்காத ஏடிஎம்கள் முன்னர் காத்துக்கிடக்கின்றனர். இந்தப் பிரச்சனையே இன்னும் ஓய்ந்தபாடில்லை. இதற்குள் இன்னொரு பிரச்சனை இந்தியாவில் உருவாகியுள்ளது. உப்புக்கு தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதாக ஒரு புரளி யாரோ கிளப்பிவிட்டார்கள்.
இதன் தொடர்ச்சியாக ஒரு கிலோ உப்பு 200 ரூபாயில் இருந்து 350 ரூபாய் வரை உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் விற்கப்பட்டு வருகின்றன. மேலும், இரவு நேரங்களிலும் உப்பு வாங்குவதற்காக மக்கள் கடைகளில் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். உப்பை வாங்க ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவரும் கான்பூரில் பலியாகியுள்ளார். மேலும் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்த உப்புத் தட்டுப்பாடு புரளி தமிழகத்தை அடைந்துள்ளது. இந்த புரளி காரணமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உப்பிற்கான தேவை அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அங்கு உப்பின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு பாக்கெட்டில் ஒரு கிலோ என்ற வகையில் 20 பாக்கெட் கொண்ட ஒரு மூட்டை கல் உப்பு 330 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரை விற்பனையாகிறது. மேலும், உப்பு கிடைக்காது என்ற புரளியால் 100 ரூபாய்க்கு விற்ற ஒரு மூட்டை கல்உப்பு 150 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
முன்னதாக, இந்தியாவில் போதிய அளவு உப்பு கையிருப்பு உள்ளது என்றும், உப்பின் விலையை ஏற்றவில்லை என்றும் மத்திய அரசும், மாநில அரசுகளும் உறுதி செய்துள்ளன. என்றாலும் புரளி நாடு முழுவதும் பரவி மக்களிடையே ஒருவித பதற்றத்தை உருவாக்கி வருகிறது.