உப்பு உற்பத்தி அதிகரிப்பு: விலை உயர்வுக்கு காத்திருக்கும் உற்பத்தியாளர்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் திருச்செந்தூர் வரையில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி நடந்து வருகிறது. உப்பு உற்பத்தியில் இந்தியாவில் குஜராத் முதலிடம் பெற்றுள்ளதை போல தமிழகத்தில் தூத்துக்குடி முதலிடத்தில் உள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து வெயில் அதிகரித்து வந்தது. மேலும் மழை பெய்யவில்லை. இந்த சீதோஷ்ண நிலை உப்பு உற்பத்திக்கு சாதகமாக இருந்தது. இதனால் உப்பு விளைச்சல் அதிகமாக நடந்து உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இம்மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விடும் என்று கருதி உப்பு உற்பத்தியை விரைவாக முடிக்க தீவிரமாக உள்ளனர். அதிக உற்பத்தி காரணமாக உப்பு விலை குறைந்துள்ளது.
கடந்த மாதம் முதல் தர உப்பு ஒரு டன் ரூ.1200க்கு விற்பனை செய்யப்பட்டது. இது தற்போது ரூ.800க்கு குறைந்துள்ளது. இரண்டாம் தர உப்பு டன் ஒன்றுக்கு ரூ.700 ஆக குறைந்துள்ளது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் கவலையில் உள்ளனர்.
அடுத்த சில நாட்களில் பருவ மழை தொடங்கினால் மீண்டும் உப்பு தேவை அதிகரிக்கும். அதன் பின்னர் உப்புக்கு உரிய விலை கிடைக்கும் என தொழில் அதிபர்கள் உப்புவை அம்பாரமாக குவித்து வருகின்றனர். உப்பு குடோன்களில் பாதுகாப்பாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கினால் உப்பு உற்பத்தி செய்ய முடியாது. இருப்பை வைத்து தான் சமாளிக்க வேண்டும். இதனால் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில் உற்பத்தியாளர்கள் காத்திருக்கின்றனர்.