நடிகை சமந்தாவின் தாய் மாமா மர்ம மரணம்: போலீசார் விசாரணை
சென்னை: நடிகை சமந்தாவின் தாய் மாமா சென்னையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நடிகை சமந்தாவின் தாயின் சகோதரர் ஆன்டி மோரிஸ்(58). ஆன்டி சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வந்துள்ளார். அவர் சென்னையில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் திங்கட்கிழமை மாலை ஆன்டி மர்மமான முறையில் தனது அலுவலகத்தில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை கடைசியாக கடந்த 24ம் தேதி பார்த்ததாக அவருடன் பணிபுரிந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆன்டி விடுப்பில் இருப்பதாக நினைத்து அவரை யாரும் தேடவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் ஆன்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆன்டியின் உடலில் எந்த காயமும் இல்லை.
அவர் மாரடைப்பால் மரணம் அடைந்திருக்கக்கூடும் என்று சமந்தாவின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.