ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியும் குதிக்கிறது? சரத்குமார் பேட்டி
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுவது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் சரத்குமார் தெரிவித்து பரபரப்பு கிளப்பியுள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் சரத்குமார், நேற்று சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீனவர்கள் மற்றும் வியாபாரிகளை திடீரென நேரில் சந்தித்தார். அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதுகுறித்து சரத்குமார் அளித்த பேட்டி:
தமிழகத்தில் உள்ள மீனவர்களின் பிரச்சினைகளையும், அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்து அடுத்த வாரம் பிரதமரை சந்தித்து அதுகுறித்து பேச உள்ளேன் என்றார்.
பட்ஜெட்
பட்ஜெட் குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, தமிழக அரசின் பட்ஜெட்டில் தெளிவு இல்லை. ரூ.3 லட்சம் கோடி கடன் இருப்பதாக கூறிய நிதி அமைச்சர், அதனை எந்த வருமானம் மூலம் அடைக்க திட்டமிட்டு உள்ளோம் என்பதை தெரிவிக்க தவறிவிட்டார் என்றார்.
ஆலோசனை
ஆர்.கே.நகரில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுமா என்ற கேள்விக்கு, நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுவது குறித்து கட்சியின் உயர்மட்டக் குழுவை கூட்டி இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று சரத்குமார் தெரிவித்தார்.
திமுக வேட்பாளர்
இந்நிலையில், சரத்குமார் காசிமேடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் எதேர்ச்சையாக வந்தார். சரத்குமாரை கண்ட மருதுகணேஷ், அவருக்கு பொன்னாடை அணிவித்தார். அவரது வாழ்த்துக்களை பெற்றார். இதற்கு பதில் மரியாதையாக, சரத்குமாரும், மருதுகணேசுக்கு பொன்னாடை அணிவித்து தேர்தலில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.
பலமுனை போட்டி
ஆர்.கே.நகரில் சசி அதிமுக, பன்னீர்செல்வம் அதிமுக, திமுக, பாஜக என பல முனை போட்டி நிலவும் நிலையில், சமத்துவ மக்கள் கட்சியும் போட்டியிட திட்டமிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.