சமத்துவ மக்கள் கட்சியை உடைக்க சதி... அதிமுக கூட்டணியில்தான் நீடிக்கிறோம் .... சொல்வது சரத்குமார்
சென்னை: சமத்துவ மக்கள் கட்சி அ.தி.மு.க. அணியிலேயே பயணித்து கொண்டிருக்கிறது. தேர்தல் தொடர்பாக எந்த மாதிரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற அதிகாரத்தை கட்சி எனக்கு வழங்கியுள்ளது. எனவே சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்போம் என்று அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., உடன் கூட்டணி சேர்ந்து, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட, சரத்குமார் தலைமையிலான, ச.ம.க., இரண்டிலும் வெற்றி பெற்றது. இதனால், சட்டசபையிலும், வெளியேயும் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்பட்டார் சரத்குமார். சரத்குமாரின் சில நடவடிக்கைகளுக்கு, கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
நடிகர் சங்க தேர்தலிலும், சரத்குமாருக்கு, அ.தி.மு.க., தலைமை ஆதரவளிக்கவில்லை. தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழலில், அவர் தலைமையிலான அணி தோல்வி அடைந்தது. சரத்குமார் மீது அ.தி.மு.க., தலைமை அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள், இதுகுறித்து கேள்வி எழுப்பியும், அவர் வாய் திறக்கவில்லை. இம்முறை, அ.தி.மு.க., உடன் கூட்டணி சேர்ந்தாலும், தேர்தலில் போட்டியிட சமத்துவ மக்கள் கட்சிக்கு 'சீட்' கிடைக்காது என, தகவல் பரவியது.
தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கலாம் என, கட்சி நிர்வாகிகள் சிலர் அறிவுறுத்தியதாகவும், அதை, சரத்குமார் கண்டு கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, ச.ம.க., பொதுச் செயலர் கரு.நாகராஜன், சென்னையில், மூன்று மாவட்ட செயலர்களான, ஐஸ் ஹவுஸ் தியாகு, ராஜா, பிரசாத் மற்றும் கட்சி யின் மகளிர் அணி செயலர் எம்.ஆர்.ஜமீலா உள்ளிட்டோர்,டெல்லியில், நேற்று, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து பா.ஜ.,வில் இணைந்தனர்.
இந்த நிலையில் அந்த கட்சியின் துணைத்தலைவரும், நாங்குனேரி எம்.எல்.ஏ.வுமான எர்ணாவூர் நாராயணன், கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்தார். இதனை தொடர்ந்து தியாகராயர் நகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி அலுவலகத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. சரத்குமார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்ட செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கட்சியின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் டெல்லி சென்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சிலருடன் பாஜகவில் இணைந்து உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினர் எர்ணாவூர் நாராயணன் கட்சிக்கு புறம்பாக செயல்பட்டதால் நீக்கப்பட்டுள்ளார்.
இதையெல்லாம் பார்க்கும் போது கட்சியை உடைக்க திட்டமிட்டு சதி நடந்துள்ளது தெரிகிறது. எனவே புதிய நிர்வாகிகளை நியமிப்பதற்கும், சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்கும் இன்றைய அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தில் ஒன்றிரண்டு மாவட்ட செயலாளர்களை தவிர அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர். கட்சி தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், புது உத்வேகம் அளிக்கும் வகையில் தேர்தல் தொடர்பாக பல்வேறு முடிவுகளை எடுக்க உள்ளோம் என்று கூறியுள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சியை பொறுத்த வரையில் அனைத்து தொண்டர்களுமே முதல்வராகவே, அமைச்சர்களாகவோ ஆகும் வகையில் வளர்க்கப்படும் கட்சியாகும்.
நான்கரை ஆண்டுகளாக கட்சியில் இருந்து விட்டு பிரிந்து சென்றவர்கள் கட்சிக்காக என்ன செய்தோம் என்பதை மனசாட்சியுடன் நினைத்து பார்க்க வேண்டும் என்றார் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
கேள்வி: தி.மு.க. அணியில் சேர்வதற்கு உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே?
சரத்குமார்: சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதால் ஒவ்வொரு கட்சியும் எந்த திசையில் பயணிக்க போகிறது என்பதை அறிந்து கொள்ளும் விதத்தில் கேட்கிறீர்கள்.
சமத்துவ மக்கள் கட்சி அ.தி.மு.க. அணியிலேயே பயணித்து கொண்டிருக்கிறது. தேர்தல் தொடர்பாக எந்த மாதிரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற அதிகாரத்தை கட்சி எனக்கு வழங்கியுள்ளது. எனவே சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்போம்.
கேள்வி: அ.தி.மு.க.வுக்கு எதிராக விமர்சனம் செய்ய சொல்லி நீங்கள் வற்புறுத்தியதாக எர்ணாவூர் நாராயணன் கூறியுள்ளாரே?
சரத்குமார்: இது அப்பட்டமான பொய். நாங்குனேரி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவர் செய்து வந்த பணிகளை நான் எப்போதும் தடுத்தது இல்லை. இதற்கு மேலும் பதில் அளிப்பதற்கு அவர் ஒன்றும் பெரிய மனிதர் அல்ல. கட்சியை விட்டு பிரிந்து சென்றவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க என்று தெரிவித்தார்.