காலையில் கொன்றுவிட்டு கண்களில் கண்ணீருடன் இரவில் தேடி அலைந்த சமயபுரம் மசினி
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உள்ள யானை மசினி நேற்று காலை அதன் பாகனை கொன்றுவிட்டு இரவில் கண்களில் கண்ணீருடன் தேடி அலைந்தது.
Recommended Video
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உள்ள யானை மசினி நேற்று காலை அதன் பாகனை கொன்றுவிட்டு இரவில் கண்களில் கண்ணீருடன் தேடி அலைந்தது.
திருச்சியில் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 10 வயது யானை மசினி. இந்த யானையின் பாகன் கஜேந்திரன் (50). இவர் நேற்று காலை குளிக்க வைத்துவிட்டு சமயபுரம் கோயிலுக்கு அழைத்து வந்தார்.
மசினியை அது வழக்கம் போல் நிற்கும் இடத்தில் நிற்க வைத்திருந்தார். அப்போது வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலில் கூட்டம் இருந்தது. சிலர் யானையிடம் ஆசி வாங்கினர்.
8 பேருக்கு காயம்
அப்போது யானையின் செயல்பாடுகளில் சற்று மாற்றம் ஏற்பட்டது. இதனால் பாகன் கஜேந்திரன் அங்குசத்தால் யானையை தட்டிக் கொடுத்தார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த யானை பாகனை தும்பிக்கையால் தூக்கி போட்டது. இதை பார்த்த பக்தர்கள் கோயிலை விட்டு முண்டியடித்து கொண்டு வெளியேறினர். அவ்வாறு செல்லும் போது 8 பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டது.
சமயபுரம் கோயில்
தொடர்ந்து மிதித்தே அந்த யானை, பாகனை கொன்றது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த யானை 2008-ஆம் ஆண்டு குட்டியாக இருந்தபோதே முதுமலை கார்குடி காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அதை மீட்டு சமயபுரம் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது.
விலா எலும்புகள் உடைந்தன
அங்கு ஏற்கெனவே இருந்த மாரியப்பன் என்ற யானைக்கு பதிலாக மசினி கொண்டு வரப்பட்டது. 2008-ஆம் ஆண்டு மசினியை கோயில் ஊழியர்கள் ரவிக்குமார் மற்றும் ராமூர்த்தி ஆகியோர் பராமரித்து வந்தனர். இந்நிலையில் 2016-ஆம் ஆண்டு மசினி திடீரென ரவிக்குமாரை தும்பிக்கையால் தூக்கி வீசயது. இதில் அவரது இரு விலா எலும்புகளும் உடைந்தன.
ஆத்திரத்தில் தூக்கி வீசிய யானை
இதற்கான காரணத்தை கேட்டபோது யானை கட்டப்பட்டிருந்த இடத்தில் பறவைகள் சப்தம் எழுப்பியதால் ஆத்திரத்தில் யானை பிளிறியது. அப்போது ரவிக்குமார் அங்குசத்தால் தட்டி கொடுத்ததால் அவரை தூக்கிவீசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடைபெற்ற இரு ஆண்டுகளுக்கு பிறகு கஜேந்திரனை மிதித்து கொன்றது.
கண்ணீருடன் காத்திருப்பு
திடீரென யானை கோபமடைந்ததற்கான காரணங்களை சிசிடிவி காட்சிகள் மூலம் ஆராயப்பட்டு வருகின்றன. நேற்று இரவு 9 மணிக்கு மசினி மாகாளிகுடி என்ற இடத்தில் அடைக்கப்பட்டது. அப்போது இரவு 12 மணி வரை யானை சோகமாக இருந்ததாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். விடிய விடிய கஜேந்திரன் வருவாரா என்று யானை கண்ணீருடன் காத்திருந்தது.