திருச்சி அருகே மாஜி த.மா.கா. ஊராட்சித் தலைவர் படுகொலை.. பதட்டம்.. போலீஸ் குவிப்பு
திருச்சி: திருச்சி சமயபுரத்தில் மாடக்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் அந்த பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருச்சி சமயபுரம் அருகே மாடக்குடி பகுதியை சேர்ந்தவர் சேகர் வழக்கறிஞர். இவர் மாடக்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பிரமுகரும் ஆவார்.
சேகர் நேற்று இரவு சமயபுரம் நால்ரோட்டில் தனது நண்பருடன் பேசி கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் திடீரென்று அரிவாளால் சேகரை வெட்டி சாய்த்தனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். உடனே 3 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர்.
சில நிமிடங்களில் இது பற்றி அறிந்த சேகரின் ஆதரவாளர்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு ஆத்திரம் அடைந்த அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு சில கடைகளை அடித்து நொறுக்கினார்கள்.
உடனே அனைத்து கடைகளும் அடைக் கப்பட்டன. தகவல் அறிந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி, லால்குடி துணை சூப்பிரண்டு நடராஜன், சமயபுரம் இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். சாலை மறியல்மேலும், அங்கு வன்முறை நடைபெறாமல் தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அதன்பிறகு சமயபுரம் போலீசார், சேகரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முடிவு செய்தனர்.
ஆனால் அவரது ஆதரவாளர்கள் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல விடாமல் தடுத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதுவரை சேகரின் உடலை எடுக்க அனுமதிக்கமாட்டோம் என்று கூறி, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி சேகரின் உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முன்விரோதம் இந்த படுகொலை சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு அதேபகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் சேகர் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும், அதுதொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி, கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். படுகொலை செய்யப்பட்ட சேகருக்கு, லதா என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.