சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருளர்களுக்கு குடிசை போட்டுக் கொடுத்த வளைகுடா பகுதி தமிழ் மன்றம்
சான்பிரான்சிஸ்கோ: சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு அமெரிக்க சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை அளித்ததுடன் ரூ.5 லட்சம் செலவில் குடிசை வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் தமிழகத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது மக்களுக்கு உதவ பல்வேறு சேவை நிறுவனங்களும், பொதுமக்களும் உதவிக்கரம் நீட்டினர். அமெரிக்க சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் சிலிக்கன் வேலி மக்களிடையே தமிழக வெள்ள சேதத்திற்கு உதவி செய்ய நிதி திரட்டியது. அந்த பணத்தை கொண்டு இந்தியாவில் வெள்ள சேத நிவாரண பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
சென்னை வாழ் மக்களின் வெள்ள பாதிப்பு பற்றி மீடியாக்கள் மூலம் அறிந்து பல நிறுவனங்கள் உதவின. சென்னையின் சுற்றுப்புறங்களில் நாடோடிகளாக வசிக்கும் ஒருசில மலை வாழ் மக்கள் ((இருளர் இனத்தினர்) அடைந்த துன்பங்களை சொல்லால் விவரிக்க முடியாது. ஆனாலும் அவர்களது இன்னல்கள் குறித்த செய்தி பொது மக்களை சென்றடையாததால் அவர்களுக்கு உதவி குறைந்த அளவே கிடைத்தது. அமெரிக்க சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம், தமிழகத்தில் Childrens Watch என்ற நிறுவனத்துடன் சேர்ந்து மலைவாழ் மக்களுக்கான நிவாரண மற்றும் மறுவாழ்வு திட்டங்களை நிறைவேற்றியது.
வெள்ள துயர் துடைப்பு பணிகளின் முதல் கட்டமாக காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் பஞ்சாயத்துகளில் 225 இருளர் பழங்குடி குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உணவு பொருட்கள், உடை மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை கொடுத்து உதவியது. வெள்ள பாதிப்பில் அனைத்தையும் இழந்த ஏழை மக்களுக்கு அது மிகவும் உதவியாக இருந்தது.
அந்த குறிப்பிட்ட மலைவாழ் மக்கள் நாடோடிகளாக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று கொண்டிருப்பதால் கல்வி, மருத்துவம் மற்றும் அன்றாட வாழ்க்கையே போராட்டமாக உள்ளது. இதை தவிர்ப்பதற்காக அவர்களுக்கு குடிசை வீடுகளை கட்டிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இரண்டாம் கட்டமாக வெள்ள நிவாரண மறுவாழ்வு அளிக்க சுமார் 5 லட்சம் ரூபாய் செலவில் குடிசை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற மக்களின் வெள்ள நிவாரண பணிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் கிராமப் பகுதியில் வாழும் மலைவாழ் மக்களின் நிவாரண பணியிலும் கவனம் செலுத்திய சான்பிரான்சிஸ்கோ பகுதி வளைகுடா தமிழ் மன்றத்தின் பணி பாராட்டுக்குறியதே.