மணல் குவாரி தடை- கட்டுமான தொழில் முடங்கும், விலை ஏறும்: லாரி உரிமையாளர்கள் வார்னிங் #sandquarry
Recommended Video
சென்னை: மணல் குவாரிகள் மீதான ஹைகோர்ட் மதுரை கிளையின் தடை காரணமாக கட்டுமான தொழில் பெரிதும் பாதிக்கப்படும் என்று லாரி உரிமையாளர் சங்கங்களும், கட்டுமான சங்கங்களும் எச்சரித்துள்ளன.
இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கருத்துக்களின் ஒரு தொகுப்பை பாருங்கள்:
யுவராஜ், மணல் லாரி உரிமையாளர் சங்கம்: இப்போது, அரசே நேரடியாக மணல் குவாரிகளை நடத்துகிறது. முன்பெல்லாம் 3000 லோடு மணல் அள்ளிய நிலை மாற்றப்பட்டு இப்போது வெறும் 300 லோடுகள்தான் அள்ள அனுமதிக்கிறது அரசு.
ஒழுங்காகிவிட்டது
இப்படி ஒழுங்குமுறை செய்த பிறகு தடை என்பது தேவையில்லை. சட்ட விரோத கொள்ளையை தடுத்தாலே ஆற்றுபடுகையை காப்பாற்றலாம். கட்டிட தொழிலாளர்கள் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
விலை கூடும்
மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின், செல்ல ராசாமணி: தூத்துக்குடியில் இறக்கப்பட்ட மலேசிய மணலை உடனடியாக வினியோகம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மணல் குவாரிகளுக்கு மொத்தமாக ஹைகோர்ட் கிளை தடை விதித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. 8 மணல் குவாரிகள் மட்டுமே தற்போது நடைபெற்று வருவதால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது.
தேவை அதிகம்
நேரடி, மறைமுகமாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். லாரி உரிமையாளர்கள் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். எம் சான்ட் என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. தமிழகத்தில் தினமும் 45 ஆயிரம் மணல் லோடு தேவைப்படுகிறது. எம் சான்ட்டால் அந்த தேவையை பூர்த்தி செய்ய முடியாது.
அளவு உள்ளது
சுரேஷ் கிருஷ்ணா, கட்டுமான உரிமையாளர் சங்கம்: ஆற்றில் குறிப்பிட்ட அளவுக்கு மணல் எடுக்க அனுமதி உண்டு. அதை தாண்டி எடுத்தால்தான் தப்பு. அரசு இதை தெளிவுபடுத்தியிருந்தால் கோர்ட் இதுபோன்ற நடவடிக்கையை எடுத்திருக்காது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.