தூத்துக்குடியில் 54000 டன் மலேசிய மணல் முடக்கம்..! மணல் மாஃபியாக்கள் அட்டகாசம்
மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனைக்கு செய்யவிடாமல் தடுத்துவைத்திருக்கிறது மாஃபியா கும்பல்
சென்னை : மணல் பற்றாக்குறையை குறைக்க மலேசியாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள மண்ணை மணல் மாஃபியா கும்பல்கள் முடக்கி வைத்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கட்டுமானப் பணிகளுக்கான மணல் இல்லாமல் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதைத் தவிர்க்க தனியார் நிறுவனம் ஒன்று மலேசியாவில் இருந்து மணலை கப்பல் மூலமாகக் கொண்டுவந்துள்ளது. ஆனால், மணல் மாஃபியா கும்பல்கள் அதை விற்பனை செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் மணல் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. ஒரு லோடு மணல் 55000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் கட்டுமானத் தொழிலும் முடங்கி உள்ளது. தமிழகத்தில் மணல் விற்பனை குறிப்பிட்ட மாஃபியாக்களின் கைகளில் தான் உள்ளது.
தமிழக வரலாற்றில் முதல் முறையாக மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பலில் கொண்டுவரப்பட்ட 54 ஆயிரம் டன் வீடுகட்டும் மணல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மணல் மாஃபியாக்களின் நெருக்கடியால் கனிமவள அதிகாரிகள் மணலை துறைமுகத்தில் இருந்து எடுத்துச்செல்ல தடைவிதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
கொடூரமான மணல் மாஃபியாக்கள்
தாமிரபரணி... காவிரி.... தென்பெண்ணை... பாலாறு என தமிழகத்தின் நீராதரமாக விளங்கும் எல்லா ஆற்றிலும் ஈவு இரக்கம் இல்லாமல் நடந்த மணல் கொள்ளையின் விளைவு இன்று நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. அதோடு ஆற்றில் மணல் அள்ள நீதிமன்றம் விதித்துள்ள தடை காரணமாக ஒரு சில மணல் குவாரிகளே செயல்பட்டு வருகின்றன.
அவதிக்குள்ளான கட்டுமானத் தொழில்
அரசு குறைந்த விலைக்கு மணலை வழங்கினாலும் தட்டுபாட்டை பயன்படுத்தி மணல் மாஃப்பியாக்கள் ஒரு டன் மணலுக்கு 12 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விலை வைத்து விற்கின்றனர்.மணல் தட்டுப்பாட்டால் பல கட்டுமான நிறுவனங்கள் தவித்து வருகின்றன. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். பல கோடி ரூபாய் பணமும் முடங்கி உள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட மணல்
இந்த மணல் தட்டுப்பாட்டை போக்க புதுக்கோட்டையை சேர்ந்த எம்.ஆர்.எம் ராமையா எண்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனம் மலேசியாவில் இருந்து 55ஆயிரத்து 445 டன் மணலை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தது. அதாவது தமிழக வரலாற்றில் முதல்முறையாக வீடுகட்ட பயன்படும் ஆற்று மணல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 7 கோடியே 75 லட்சத்து 54 ஆயிரத்து 813 ரூபாய் மதிப்புள்ள அந்த மணலுக்கு 15 லட்சத்து 4 ஆயிரத்து 96 ரூபாய் சுங்க வரியும் செலுத்தப்பட்டது.
லாரிகளில் கேரளா போன மணல்
கப்பலில் இருந்து துறைமுக வளாகத்தில் கொட்டப்பட்ட மணலை 57 லாரிகளில் கடந்த சில தினங்களாக கேரளாவின் திருவனந்தபுரத்துக்கும் தமிழகத்தில் சில பகுதிகளுக்கும் 1000 டன் மணல் ஏற்றிச்செல்லப்பட்டது . தமிழகத்தில் எடுக்கப்படும் மணல் விலையை விட குறைந்த விலைக்கு இந்த மணல் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மணல் மாஃபியாக்களின் அட்டகாசம்
இதையடுத்து கனிம வளத்துறையின் உதவியுடன் உள்ளூர் மணல் மாஃபியாக்கள் துறைமுகத்துக்குள் இருந்து மணல் வெளியே எடுத்து செல்லவிடாதபடி முடக்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 54 ஆயிரம் டன் அளவிலான மணல் லாரிகளில் ஏற்றப்படாமல் துறைமுக வளாகத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த 54 ஆயிரம் டன் மணலும் மார்கெட்டுக்கு வந்தால் எங்கே உள்ளூரில் 50 மடங்கு விலைக்கு விற்கப்படும் மணல் விற்கமுடியாத சூழ்நிலை ஏற்படுமோ என்று அஞ்சிய மணல் மாஃபியாக்கள், இதனை தடுத்து வைத்திருப்பதாக கட்டுமான நிறுவனத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
கேள்விக்குள்ளான சுங்கத்துறையினர்
பல வருடங்களாக தமிழகத்தில் ஆறுகளை சூறையாடி மணல் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட போதெல்லாம் கண்டும் காணாமலும் இருந்த கனிம வளத்துறையினர், முறையான சுங்கவரி கட்டி இறக்குமதி செய்யப்பட்ட மணலை வெளியில் எடுத்து வர தடை போட்டுள்ளது ஏன் ? என்று பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மலேசியாவில் இருந்து இதே போல தொடர்ச்சியாக கப்பல் மூலம் மணல் இறக்குமதி செய்யப்பட்டால் தமிழகத்தில் மணல் விலை குறைவதோடு தமிழக ஆறுகள் சூறையாடப்படுவதும் தடுத்து நிறுத்தப்படும் என்கிற வாதமும் எழுந்துள்ளது.