ஆற்றில் மணல் அள்ளுவதால் முக்கொம்பு அணை மதகுகள் உடையவில்லை: முதல்வர் திட்டவட்டம்
Recommended Video
திருச்சி: மணல் குவாரிகள் செயல்பாடு காரணமாக முக்கொம்பு கொள்ளிடம், மேலணை மதகுகள் உடையவில்லை என்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
முக்கொம்பு அணையில் 9 மதகுகள், நேற்று முன்தினம் இரவு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அதிருஷ்வசமாக மக்கள் யாருக்கும் இதனால் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்த பகுதிக்கு இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இதன்பிறகு நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
அப்போது, இந்த பகுதியில் மணல் குவாரிகள் மணல் அள்ளுவதுதான் மதகுகள் உடைப்புக்கு காரணமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:
நீங்கள் எல்லோருமே, பத்திரிக்கையாளர்கள். மணல் குவாரிக்கும் இதற்கும் என்ன தொடர்பு உள்ளது? மணல் அள்ள, ஒரு வரைமுறை உள்ளது. அந்த வரைமுறைக்கு உட்பட்டு தான் அள்ளுவார்களே தவிர, புதிதாக வந்து அள்ளுவது கிடையாது.
எல்லோர் ஆட்சியிலும் இப்படித்தான் நடைமுறை உள்ளது. அதிமுக ஆட்சியில் மட்டும்தான் இப்படி என்பது தவறான கருத்து. குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் தான் மணல் அள்ளுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்பதால் மதகுகள் உடைந்ததற்கும், அதற்கும் எந்த தொடர்பும் கிடையாது.
இது மட்டுமல்ல, படிப்படியாக ஆற்றில் மணல் எடுப்பதைத் தடை செய்ய இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிநாட்டிலிருந்து மணல் இறக்குமதி செய்வதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. மணல் பயன்பாட்டை படிப்படியாக குறைத்து, எம்-சாண்ட் (M-Sand) பயன்படுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
கட்டுமானத் தொழில் செய்வோர் மற்றும் பொதுமக்களுக்கு இந்த அறிவுறுத்தலை அரசு வழங்கியுள்ளது. இப்போது 20 முதல் 30 சதவீதம் மக்கள் எம்-சாண்டை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். படிப்படியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி, மணல் அள்ளுவது முழுவதும் தடை செய்யப்பட்டு முழுக்க எம்-சாண்ட் மூலமாக கட்டுமானப் பணி நடைபெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்களும், கட்டுமான தொழிலாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பேட்டியில் தெரிவித்தார்.