கடும் சூறாவளி.. 20 அடிக்கு எழும்பும் கடல் அலைகள்.. ராமேஸ்வரத்தில் கடல் கொந்தளிப்பு.. ரயில் நிறுத்தம்
மணல் புயல் வீசி வருவதால் பாம்பம் அருகே பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மணல் புயல் வீசி வருவதால் பாம்பம் அருகே பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும், எனவே, வரும் 30-ம் தேதி வரை குமரிக் கடல், மாலத்தீவு பகுதி, கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், ராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா பகுதியில் சூறைக்காற்றும், மணல் புயலும் கடுமையாக வீசி வருகிறது. தனுஷ்கோடி அரிச்சல்முனை, முகுந்த ராயர் சத்திரம் பகுதிகளில் கடலின் அலை சுமார் 20 அடிக்கும் மேல் எழும்பி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். இதனால் கடற்கரை பகுதியிலிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களை போலீசார் வெளியேறும்படி கேட்டுக் கொண்டனர்.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறைக்காற்று காரணமாக, திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் வந்த பயணிகள் ரயில் பாம்பன் பாலம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் காற்றின் வேகம் குறைந்தவுடன் ரயில்கள் செல்லும் என ரயில்வே ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.