பாபநாசம் மலைப்பகுதியில் சந்தன மரம் வெட்டி கடத்தல் - பொது மக்கள் அதிர்ச்சி
பாபநாசம் வனப்பகுதிகில் சந்தன மரக்கடத்தல் நடைபெறுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை: பாபநாசம் வனப்பகுதியில் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டதால் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் பொதிகை மலை அடிவாரத்தில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் உள்ளது. இந்த கோயில் 10 சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்டது என்று ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த கோயிலுக்கு செங்கோட்டையை சேர்ந்த கந்தசாமி என்பவர் தலைவராகவும், சிவந்திபுரம் நாரயணன் துணை தலைவராகவும் இருந்து வருகின்றனர்.
இந்த கோயிலில் தினமும் காலை, மாலை வேளைகளில் பூஜைகள் நடந்து வருகிறது. இந்த கோயிலில் உள் பகுதியில் அரிய வகை சந்தனம், தேக்கு உள்ளிட்டவை வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு அங்குள்ள சந்தன மரத்தை மர்ம நபர்கள் யாரோ வேரோடு அறுத்து எடுத்து சென்று விட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ஏற்கனவே இந்த கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேச்சியம்மன் சாமி சிலையின் தலையை சில மர்ம நபர்கள் உடைத்து விட்டு உண்டியலையும் உடைத்து சென்றனர். இதில் ஈடுபட்டவர்களை இதுவரை அடையாளம் காணமுடியாத நிலையில் தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். போலீசார் விரைவாக விசாரணை நடத்தி இதில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.