வீட்டு தோட்டத்தில் வளர்ந்த சந்தன மரத்தை கண் அயர்ந்த வேளையில் “அலேக்” செய்த மர்ம நபர்கள்!
கோவை: கோவையில் வீடு ஒன்றில் 15 வருடங்களாக வளர்த்து வந்த சந்தன மரமொன்றினை மர்ம நபர்கள் வெட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், ரேஸ்கோர்ஸ் சாலையைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது வீட்டின் தோட்டப் பகுதியில் சந்தன மரம் ஒன்றினை கடந்த பதினைந்து ஆண்டுகளாக கண்ணும் கருத்துமாக பராமரித்து, வளர்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் உறங்கி விழித்த சின்னசாமி தனது வீட்டையொட்டி வளர்ந்திருந்த சந்தன மரம் காணாமல் போனதை அறிந்து திடுக்கிட்டார். சர்வதேச சந்தையில் நல்ல விலை கிடைக்கும் என்பதால் யாரோ சிலர் அந்த மரத்தை வெட்டி, கடத்திச் சென்றுவிட்டதாக போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.
இதே மரத்தை கடந்த மாதத்தில் சிலர் வெட்ட முயன்றபோது அப்பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் விழிப்புடன் இருந்ததால் அந்த முயற்சி தடுக்கப்பட்டது. இருப்பினும் விடாமல் அந்த கடத்தல் கும்பல் ஆள் அசந்த நேரத்தில் மதில் சுவரை தாண்டி குதித்து அந்த சந்தன மரத்தை சத்தமில்லாமல் வெட்டிக் கொண்டு சென்றுவிட்டதை எண்ணி சின்னசாமி வேதனையில் ஆழ்ந்துள்ளார்.
கடந்த மாதம் இதேபகுதியில் இருந்து 10 மற்றும் 12 ஆண்டுகால வளர்ச்சியடைந்த நிலையில் இருந்த இரு சந்தன மரங்களையும் சிலர் வெட்டி, கடத்திச் சென்று விட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.