திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா: நளதீர்த்தம் தயார்… பந்தல் அமைக்கும் பணி தீவிரம்
திருநள்ளாறு: திருநள்ளாறில் நடக்கவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்கள் நீராட வசதியாக நளதீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் ஆகியவை தண்ணீர் நிரப்பப்பட்டு தயார் நிலையில் உள்ளன. பக்தர்கள் செல்லும் வரிசைகள் மற்றும் நளதீர்த்தம் செல்லும் பாதைகளில் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காரைக்காலை சேர்ந்த திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரசுவாமி கோவிலில் சனிபகவான் தனியாக சன்னதி கொண்டு, கிழக்கு நோக்கிய நிலையில் அபயஹஸ்த முத்திரையுடன் அனுக்கிரக மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சனிதோஷ நிவர்த்திக்கு பெயர் பெற்றது திருநள்ளாறு தலம் மட்டுமே ஆகும்.இங்குள்ள நளதீர்த்தம் மிகவும் விசேஷமானதாகும்.
நளதீர்த்தத்தில் சனிகிரகத்திலிருந்து நேரடியாக கதிர்வீச்சுகள் இறங்குவதாக கூறப்படுகிறது. இங்குள்ள சனீஸ்வரபகவானை தரிசனம் செய்வதன் மூலம் நீண்ட ஆயுள், வியாபார விருத்தி, உத்யோக உயர்வு, காரிய வெற்றிகள் கிடைக்கும். நல்ல உடல் ஆரோக்கியமும் கிட்டும்.
டிசம்பர் 16ல் சனிப்பெயர்ச்சி
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா வருகிற டிசம்பர் மாதம் 16-ம் தேதி நடைபெறவுள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை நடக்கும் விழா இது. திருநள்ளாறில் நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் ஆகியவை உள்ளன. கோயிலுக்கு வரும் பெரும்பான்மையானவர்கள் நளதீர்த்தத்தில் நீராடுவர். மற்ற தீர்த்தத்திலும் பக்தர்கள் நீராடுவது வழக்கத்தில் உள்ளது.
பக்தர்கள் நீராடும் தீர்த்தங்கள் தூர்வாரும் பணி கடந்த ஒரு மாதமாக மேற்கொள்ளப்பட்டது. முதல்கட்டமாக நளதீர்த்தத்தில் கடந்த மாத இறுதியில் புதிதாக தண்ணீர் நிரப்பப்பட்டது. கோயில் அருகே உள்ள பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் ஆகியவற்றில் நடந்த தூர்வாரும் பணி கடந்த சில தினங்களுக்கு முன்பு முடிக்கப்ட்டது. இரண்டு குளத்திலும் புதிதாக தண்ணீர் நிரப்பட்டு பக்தர்கள் நீராடும் நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
சனிப்பெயர்ச்சி பரிகாரம்
இந்த ஆண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனிப்பெயர்ச்சி வருகிற 16-ந் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு நடைபெறுகிறது. அப்பொழுது சனிபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
இந்த சனிப்பெயர்ச்சியினால் மிதுனம், கன்னி, மகரம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு நன்மையான பலன்கள் கிட்டும். தனுசு, விருச்சிகம், துலாம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமும், மேஷ ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி காலமும், ரிஷப ராசிக்காரர்களுக்கு சப்தம கண்டக சனி காலமும், சிம்ம ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி காலமும் தொடங்குகிறது. கும்பம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கு சமமான பலன்கள் கிட்டும். இருந்தாலும் அனைத்து ராசிக்காரர்களும் சனிபகவானை தரிசனம் செய்வது நல்லது என்று ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.
பந்தல் அமைக்கும் பணி
சனிப்பெயர்ச்சி தினத்தன்று பகவானை தரிசனம் செய்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி பகவானை தரிசனம் செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகமும், திருநள்ளாறு தேவஸ்தானமும் இணைந்து செய்து வருகின்றன. தற்பொழுது பக்தர்களின் வசதிக்காக நான்கு விதமான வரிசைகள் அமைக்கப்பட்டு பந்தல்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதுபோன்று நளதீர்த்தம் செல்லும் வழியிலும் பிரமாண்டமான பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், முக்கிய பிரமுகர்களுக்கான தரிசன பாதையில் (சரஸ்வதி தீர்த்தம் அருகில்) சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று மட விளாகத்திலும் பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்படுகின்றன.
சனிப்பெயர்ச்சி விழாவிற்குள் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து முடிக்க தேவஸ்தான நிர்வாகம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் சனிப்பெயர்ச்சி விழாவிற்கு வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக தேவஸ்தான நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.