சங்கரன் கோவில் ஆடி தபசு: ஆகஸ்ட் 16ல் உள்ளூர் விடுமுறை
நெல்லை: சங்கரன்கோவில் சங்கர நாராயணன் கோவில் தபசு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.
சங்கரநாராயணர் திருத்தலத்தை சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு உக்கிர பாண்டிய மன்னன் கட்டியுள்ளார். இங்கு மூன்று கருவறைகள் உள்ளன. ஸ்ரீ சங்கரேஸ்வரர், அன்னை கோமதி அம்மன், மற்றும் ஸ்ரீ சங்கரநாராயணன் ஆகியோர் முறையே உள்ளனர்.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆடித்தபசுத் திருவிழா விமர்சையாக நடைபெறும். இத்திருவிழாவில் வெளியூர்களிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வர்.
சக்தி வாய்ந்த அம்மன்
கோமதி அம்மன் மிகவும் சக்தி பெற்ற அம்மன். கருவறைக்கு முன்பு உள்ள சக்கரத்தில் மன நோய் உள்ளவர்களும், மன அழுத்தம் உள்ளவர்களும் அமர்ந்து அம்மனை வழிபட சகலமும் தீர்ந்திடும், வாழ்வு வளம் பெறும், மன நிம்மதி கிடைக்கும் என்கின்றனர்
நாகசுனை
இங்குள்ள திருக்குளம் நாகசுனை என்பது ஆகும். இதை நாக தேவதைகளான பதுமன்-சங்கம் தோண்டிய தாகவும், இந்த சுனையில் உள்ள நீருக்கு அதிக சக்தி உள்ளது என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
துன்பங்கள் கரையும்
தினமும் இந்த சுனை நீர் கொண்டுதான் இங்குள்ள சிலைகளுக்கு ஆராட்டு செய்யப்படுகின்றது. ஆடித்தபசு அன்று திருக்குளத்தில் சர்க்கரையையும் உப்பையும் கலந்து வீசி எறிந்து வேண்டினால் கேட்டது கிடைக்கும் என்றும். சகல துன்பங்களும் அவை நீரில் கரைவது போன்று கலந்து போய்விடும் என்பது ஐதீகம்.
புற்று மண் பிரசாதம்
இங்குள்ள புற்று மண்ணை அருள் பிரசாதமாக நோய் தீர்க்கும் நிவாரணி என்று பக்தர்கள் நம்புகின்றனர். தங்கள் வீடுகளில் பாம்பு இருப்பதை கண்டால் சங்கரன் கோவிலுக்கு வருவதாக நேர்ந்து கொண்டால் அதன் பின்பு எந்த பாம்பும் அந்த வீட்டுக்கு வருவதில்லை என்பது இப்பகுதி பக்தர்களின் நம்பிக்கை.
ஆடித்தபசு திருவிழா
ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் சங்கரன் கோவில் உள்ள சங்கரநாராயணர் ஆலயத்தில் நடைபெறும் ஆடித்தபசு திருவிழா வரும் ஆகஸ்ட் 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆகஸ்ட்16ம் தேதி ஆடிதபசு காட்சி நடக்கிறது. இதனை முன்னிட்டு நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆகஸ்ட் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளளது.
தவக்கோலத்தில் அம்மன்
ஆகஸ்ட் 16ம் தேதியன்று அன்று காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையை தொடர்ந்து, கோமதி அம்பாள் தங்கச் சப்பரத்தில் தவக்கோலத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதியில் உள்ள தவசு மண்டபத்திற்கு சென்று தபமிருக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
சங்கர நாராயணர் காட்சி
அன்று மாலை கோயிலில் இருந்து சுவாமி சங்கரநாராயணராக ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதி தவசு பந்தலை அடைந்ததும், அங்கு மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் ஆடித்தவசு விழா நடக்கிறது.
வெள்ளி யானை வாகனம்
அம்பாள் மீண்டும் தவசு மண்டபத்தில் தவமிருக்கச் சென்றதும், இரவு 12 மணி அளவில் கோவிலில் இருந்து சுவாமி சங்கரலிங்கராக வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமியாக காட்சி கொடுக்கும் இரண்டாம் தவசு காட்சி நடக்கிறது.