சங்கரன்கோவில் ஆடி தபசு விழா: கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கரநாராயணசாமி கோவிலில் இந்தாண்டுக்கான ஆடிதபசு விழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆகஸ்ட் 9ல் தபசு காட்சி நடைபெறுகிறது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணசாமி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் ஆடி தபசு விழா பிரசித்த பெற்றதாகும். ஆடி மாதம் 12 நாட்கள் விழா சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு ஆடி தபசு விழா நாளை துவங்கிறது.
கோமதி அம்மன் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5 மணிக்குள் கொடியேற்றப்படுகிறது. விழாவில் தினமும் காலை நேரங்களில் கோயிலில் இருந்து கோமதி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி ரத வீதி உலாவும், மாலையில் சமுதாய மண்டகப்படி கட்டிடங்களுக்கு அம்பாள் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவின் முக்கிய அம்சமான தேரோட்டம் 11ம் நாளான 9ம் தேதி காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது. அன்று காலை கோயிலின் உட்பிரகாரத்தில் மேற்கு விதியில் யாகசாலை மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது.
தொடர்ந்து கோமதி அம்பாள் தவக்கோலத்தில் எழுந்தருளி தெற்கு ரதவீதியில் உள்ள தபசு மண்டபத்திற்கு சென்று தவமிருக்கும், நிகழ்ச்சி நடைபெறும்.
மாலையில் கோயிலிருந்து சுவாமி சங்கரநாராயணராக ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதி தபசு பந்தலை அடைந்ததும், அங்கு அம்பாளுக்கு சுவாமி சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் ஆடி தபசு விழா நடக்கிறது.
இதனை தொடர்ந்து அம்பாள் மீண்டும் தபசு மண்டபத்தில் தவம் இருக்க, இரவு 12 மணி அளவில் கோயிலில் இருந்து சுவாமி சங்கரலிங்கராக வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமியாக காட்சி கொடுக்கும் இரண்டாம் தபசு காட்சி நடக்கிறது.
இந்த தபசு காட்சியை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கரன்கோவிலுக்கு வருகை தருவார்கள்.