சங்கரராமன் கொலை வழக்கில் விரைவில் மேல்முறையீடு?
காஞ்சிபுரம்: சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் உட்பட 23 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து விரைவில் அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்படக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளராக இருந்த சங்கரராமன் 2004ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் குற்றம்சாட்ட காஞ்சி சங்கராச்சாரியார்கள் உட்பட 23 பேரை அண்மையில் புதுவை நீதிமன்றம் விடுதலை செய்தது.
இருப்பினும் தமிழக சிபிசிஐடி பிரிவு போலீசார் ஆலோசனையுடன் புதுவை அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தேவதாஸ் தெரிவித்திருந்தார். அத்துடன் அவர் காஞ்சிபுரம், சி.பி.சி.அய்.டி. டி.எஸ்.பி.க்கு எந்தெந்த அடிப்படையில் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் குறிப்பிட்டு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
அதில் இடம்பெற்றுள்ளதாவது:
ரவி சுப்பிரமணியம் பல்டி
இந்த வழக்கில் அப்ரூவர் ரவிசுப்ரமணியம் பல்டி சாட்சியானதால் அது தொடர்பாக தனி வழக்காகவே விசாரிக்கலாம். ஆனா, அவரை வழக்கிலிருந்தே விடுதலை செய்திருக்கிறது நீதிமன்றம். இதை எதிர்த்து மறுவிசாரணை நடத்த கோரலாம்.
முன்விரோதமே இல்லையா?
சங்கரராமனுக்கும், ஜெயேந்திரருக்கும் முன்விரோதம் இல்லை என்று நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள்ளார். ஆனால் சோமசேகர கனபாடிகள் என்ற பெயரில் ஜெயேந்திரருக்கு எதிரா எழுதப்பட்ட கடிதங்களில் இருப்பதெல்லாம் சங்கரராமன் கையெழுத்துதான் என்று வல்லுநர்கள் சாட்சியமே அளித்திருக்கின்றனர்.
சங்கரராமன் குடும்பத்தினர் அடையாள,
காஞ்சி மாஜிஸ்டிரேட் முன்பாக நடந்த அணிவகுப்பில் கொலையாளிகளை சங்கரராமன் குடும்பத்தினர் அடையாளம் காட்டியிருந்தனர். இதை நீதிபதி தமது தீர்ப்பின் போது கவனத்தில் கொள்ள்ளவில்லை.
கொலைக்கு கூலி
மேலும் கொலைக்காக 5 லட்ச ரூபாய் மடத்திலிருந்து கொடுக்கப்பட்டிருப்பதையும் அதில் ஒரு லட்சத்தை ஜெயேந்திரரே கொடுத்திருக்கிறார் என்றும் அரசுத் தரப்பு நிரூபித்த ஆதாரங்களும் ஏற்கப்படவில்லை.
மேல்முறையீடு
இந்த வாதங்களை முன்வைத்து மேல்முறையீடு செய்யலாம் என்று அரசு வழக்கறிஞர் காஞ்சிபுரம் சிபிசிஐடி பிரிவுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளாராம்.