சங்கரராமன் கொலை.. வரலாறு காணாத பிறழ் சாட்சிகள்... 82 பேர் மாற்றிப் பேசிய கதை!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளராக இருந்தவர் சங்கரராமன். இவர் கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி கோவில் அலுவலகத்தில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு 8 வருடமாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஜெயேந்திரர் உள்ளிட்ட அத்தனை பேருரையும் புதுச்சேரி செஷன்ஸ் கோர்ட் இன்று விடுதலை செய்து விட்டது.
இந்த வழக்கில் அத்தனை பேரும் விடுதலையாக சாட்சிகள் பிறண்டதே முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது அரசுத் தரப்பு சாட்சிகள் அலை அலையாக பிறழ் சாட்சிகளாக மாறியதால் விசாரணையின்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சாட்சிகள் விசாரணையின்போது, ஒவ்வொரு முறையும் பெரும் திரளான சாட்சிகள் மாற்றி சாட்சியம் அளித்தனர். போலீஸ் விசாரணையின்போது கொடுத்த வாக்குமூலத்தை மாற்றி அவர்கள் பதிலளித்தனர்.
இந்த வழக்கில் சங்கரராமனின் மனைவி பத்மா உள்பட மொத்தம் 189 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். இதில் 82 சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு முக்கியமான கொலை வழக்கில் பெரும் திரளான சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியது அனேகமாக இதுதான் முதல் முறையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
புதுச்சேரி கோர்ட் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படுமா என்பது தெரியவில்லை.