சிறையிலுள்ள அண்ணனை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.. சாந்தன் சகோதரர் வேதனை: வீடியோ
வேலூர் சிறையில் இருக்கும் என் அண்ணன் சாந்தனை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என சாந்தனின் சகோதர் சுதாகர் உருக்கமாகக் கூறினார்.
வேலூர்: கடவுள் தான் என் அண்ணனைக் காப்பற்ற வேண்டும் என ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் உள்ள சாந்தனின் சகோதரர் சுதாகர் கூறினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையான வழக்கில் கைது செய்யப்பட்டு பேரறிவாளன, நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழுபேர் வேலூர் சிறையில் உள்ளனர். சிறையில் இருக்கும் சாந்தனை ஈழத்திலிருந்து வந்த அவரது சகோதரர் சுதாகர் சந்தித்தார்.
அதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சுதாகர் அண்ணன் சாந்தன் நலமுடன் உள்ளார். அவரை நான் சந்தித்த போது அம்மா பற்றியும் குடும்பம் மற்றும் உறவினர்கள் குறித்து விசாரித்தார்.
எங்களுடைய அம்மாவுக்கு கண்ணில் பிரச்சனை இருப்பதால் அவரால் பயணம் செய்து இங்கு வந்து அண்ணனைப் பார்க்க முடியவில்லை. இப்போது திரும்ப ஈழத்துக்குச் சென்று அம்மாவிடம் அண்ணன் கூறியவற்றைச் சொல்ல வேண்டும்.
அண்ணன் தான் வீட்டுக்கு வரும் சூழல் உருவாகும் என கூறியுள்ளார். இனி கடவுள் தான் அண்ணனைக் காப்பாற்ற வேண்டும் என வேதனையுடன் கூறினார்.